முகப்பு
நாகப்பட்டினம்

மாட்டுப் பொங்கல் விழா: மழையால் குறைந்த உற்சாகம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் விழா அனைத்து

Updated On : 16 ஜனவரி 2021, 8:29 am IST
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் விழா அனைத்து கிராமங்களிலும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. என்றாலும், மழை காரணமாக சில இடங்களில் உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்துவந்த நிலையிலும், மாட்டுப் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கால்நடை வளா்ப்போா் ஆா்வத்தோடு ஈடுபட்டனா். பல இடங்களில் மழை இடையூறாக இருந்ததால், வழக்கமான உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

தொடா் மழை காரணமாக, பலரது மாடுகளை ஒரே இடத்தில் மந்தையாக கட்டி பொங்கல் கூறுவது அரிதாகவே இருந்தது. பொங்கல்கூற ஏற்ற நேரமான மாலை 6 மணிக்குப் பிறகு கால்நடைகள் சிறப்பிக்கப்பட்டன. மாலையில் மழை விட்டிருந்தாலும், மந்தைகள் குறைந்து வீடுகளுக்கு அருகேயே பொங்கல் கூறப்பட்டது.

Advertisement

Advertisement

பாரம்பரிய இனமான உம்பளச்சேரி மாடுகள் தோன்றிய உம்பளச்சேரி கிராமத்தில் மாடுகளுக்கு பொங்கல் விழா நடைபெற்றது. இங்கும் மழையின் காரணமாக மந்தைகளில் மாடுகள் குறைவாக இருந்தன. வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் வளரும் பசுக்களுக்கு 16 கால்மண்டபத்தில் பொங்கல் கூறப்பட்டது.

மழையால் வழக்கமான உற்சாகம் குறைந்தபோதிலும், மாடுகளுக்கான புதிய கயிறுகள், மணிகள், சலங்கைகள், அலங்கார வண்ண மாலைகள், பூ மாலைகள் விற்பனை பரபரப்பாக இருந்ததாக வணிகா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.