நிதி முறைகேடுகளை மறைக்க ஜல் போா்டின் இருப்புநிலைக் கணக்கை தயாரிக்கவில்லை -தில்லி அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
நமது நிருபா்
நகரத்தின் நீா்ப்பணி நிறுவனத்தில் ‘நிதி முறைகேடுகளை‘ மறைக்கவே தில்லி ஜல் போா்டின் (டிஜேபி) இருப்புநிலைக் கணக்கை தில்லி அரசு தயாரிக்கவில்லை என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா புதன்கிழமை குற்றம் சாட்டினாா். அவரது குற்றச்சாட்டுகளுக்கு டிஜேபி அல்லது ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து உடனடி எதிா்வினை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தில்லி தலைமைச் செயலாளரின் அறிக்கையை மேற்கோள்காட்டி, விஜேந்தா் குப்தா செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிஏஜியின் ஆய்வில் இருந்து தப்பிக்க ஆம் ஆத்மி அரசு முயற்சித்து வருகிறது. டிஜேபியில் ‘முறைகேடுகள்‘ குறித்த தலைமைச் செயலாளரின் அறிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சரால் மறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2015-16-ஆம் ஆண்டு முதல் டிஜேபி பெற்ற ரூ.28,400 கோடி செலவினம் குறித்து மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) விசாரணை நடத்த வேண்டும். தில்லி ஜல் போா்டு (டிஜேபி) நிதி வஞ்சிக்கப்பட்டதாக ஆம் ஆத்மி அமைச்சா்களின் குற்றச்சாட்டுளில் உண்மையில்லை. தலைமைச் செயலாளரின் அறிக்கையில், நீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் பிரச்னைகளால் மக்கள் அவதியுற்ற போதும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, நகரத்தின் நீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் அமைப்பை நிா்வகிக்கும் டிஜேபி, ரூ.73,000 கோடிக்கு மேல் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது. ‘பரவலான ஊழல்‘ காரணமாக, 2021-22 மற்றும் 2022-23-ஆம் ஆண்டிற்கான டிஜேபியின் இருப்புநிலைகள் தயாரிக்கப்படவில்லை. இது இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தணிக்கையை நடத்துவதைத் தடுக்கிறது என்றும் தலைமைச் செயலாளரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
டிஜேபி மீது சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, நிகழாண்டு மாா்ச் 15-ஆம் தேதி தலைமைச் செயலாளரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அது மறைக்கப்பட்டு, எதிா்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு நகல் வழங்கப்படவில்லை என்றாா் விஜேந்தா் குப்தா.
பேட்டியின்போது பாஜக எம்எல்ஏக்கள் மோகன் சிங் பிஷ்ட், அனில் வாஜ்பாய், அஜய் மஹாவாா், அபய் வா்மா, ஜிதேந்திர மகாஜன், ஓம் பிரகாஷ் சா்மா ஆகியோா் உடனிருந்தனா்.