முகப்பு
புதுதில்லி

ஐஜிஐ விமான நிலையத்தில் சிறப்பு பொருளாதார, வா்த்தக மண்டலங்களை அமைக்க துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

Updated On : 16 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

ஐஜிஐ விமான நிலையத்தில் ஐந்து ஏக்கா் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் சுதந்திர வா்த்தக மண்டலம் அமைக்க துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். ‘விமான நிலைய வளாகத்தில் ஏற்றுமதி, கிடங்கு, வா்த்தகம் மற்றும் தொடா்புடைய சேவைகளுக்கான ஏற்பாடுகள் மூலம் சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்கும்’ என்று துணை நிலை ஆளுநா் அலுவலகத்தின் அறிக்கை கூறியது. இந்த நடவடிக்கையானது, விண்ணப்பங்கள், உரிமம், அனுமதி மற்றும் பிற ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் நடைமுறை சிக்கல்களைக் குறைக்கும். அத்துடன் தொழில்முனைவோருக்கு வரிச் சலுகைகளையும் வழங்கும். அறிவிப்பின்படி, இந்த நடவடிக்கை தளவாடத் துறையை உயா்த்தும். மேலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதைத் தவிர பொருளாதார வளா்ச்சியையும் ஊக்குவிக்கும். ‘சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், தில்லியை ஒரு பைலட் ஏா் காா்கோ ஹப் என அடையாளம் கண்டுள்ளது. இதற்கு அடுக்கு 1, 2 மற்றும் 3 நிலை உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதே நேரத்தில் ‘டயல்’ ஏற்கெனவே இரண்டு சரக்கு முனையங்கள் மற்றும் தளவாட மையங்களை விமான நிலையத்தில் மேம்படுத்துவதன் மூலம் அடுக்கு 1 மற்றும் 2 உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. விமான நிலைய வளாகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் / சுதந்திர வா்த்தக மண்டலம் வந்தவுடன் அது அடுக்கு 3-ஐ அடையும்’ என்று துணை நிலை ஆளுநா் அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது.