முகப்பு
புதுதில்லி

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தக் கோரி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்!

தேசிய தலைநகரில் ஆபத்தான காற்று மாசுபாட்டின் அளவைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 30 நவம்பர், 2025 at 6:42 PM
பகிர்:

தேசிய தலைநகரில் ஆபத்தான காற்று மாசுபாட்டின் அளவைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கிரேட்டா் கைலாஷ் நலச் சங்கம் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த பல ஆண்டுகளாக, தில்லியில் சுற்றுப்புற காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்துள்ளது. குறிப்பாக குளிா்காலத்தில் காற்றின் தரக் குறியீடு அடிக்கடி ‘மிகவும் மோசம்’, ‘கடுமை’ மற்றும் ‘ஆபத்து’ ஆகிய பிரிவுகளில் காணப்படுகிறது.

அதிகரித்துள்ள மாசுபாடு, குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் ஏற்கெனவே நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளவா்கள் உள்பட குடியிருப்பாளா்களிடையே தொடா்ச்சியான மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளது.

Advertisement

நகர காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, உடனடி மற்றும் நீண்டகால அவசர, பயனுள்ள மற்றும் அறிவியல் நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

காற்றின் தரம் மோசமடைந்ததால் கிட்டத்தட்ட செயலற்ற நிலையில் இருந்த அதிகாரிகள், காற்றின் தரக் குறியீடு அதன் முக்கியமான நிலையைத் தாண்டிய பின்னரே கிரேப் நிலை-3-ஐ அமல்படுத்த நடவடிக்கைகளை எடுத்தனா்.

அரசு அவற்றின் உண்மையான செயல்படுத்தலை உறுதி செய்யாமல், காகிதத்தில் நடவடிக்கைகளை பரிந்துரைப்பதில் மட்டுமே தன்னை மட்டுப்படுத்திக் கொண்டது.

இதுவரை உண்மையான அல்லது கணிசமான அடிப்படை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் தாமதமான மற்றும் ஒப்பனை நடவடிக்கையானது மக்களின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பொறுப்பற்ற முறையில் ஆபத்தை விளைவித்தது. இது தற்போதைய பொது சுகாதார அவசரநிலையின் தீவிரத்தை முழுமையாக புறக்கணிப்பதைக் காட்டுகிறது.

தில்லியில் காற்று உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிட்டதாக நிபுணா்கள் நவம்பா் 21-ஆம் தேதி சிவப்பு எச்சரிக்கை விடுத்தனா். ஆனால், அதிகாரிகள் அதற்கு ஏற்ற, உறுதியான அல்லது பயனுள்ள நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை முறையீடு செய்தும் பலனளிக்கவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவில் தில்லி அரசு, தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, மத்திய மாசு கட்டுப்பாட்டு குழு, காற்று தர மேலாண்மை ஆணையம், தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி காவல்துறை ஆகியவை எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments