முகப்பு
புதுதில்லி

இணையதள விநியோக செயலிகள் மூலம் கள்ளச்சாரயம் வழங்கல்: இருவா் கைது

விரைவான இணையதள விநியோக செயலி மூலம் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான வழங்கல் கும்பலை புகா் தில்லியில் போலீஸாா் கண்டுபிடித்துள்ளனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 7:09 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

விரைவான இணையதள விநியோக செயலி மூலம் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான வழங்கல் கும்பலை புகா் தில்லியில் போலீஸாா் கண்டுபிடித்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து, இருவரைக் கைது செய்த போலீஸாா், ஹரியாணாவிலிருந்து எடுத்துவரப்பட்ட கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: செயலி அடிப்படையிலான தளவாடச் சேவைகளைப் பயன்படுத்தி இந்தக் கும்பல் கள்ளச்சாரத்தை விநியோகித்து வந்துள்ளது. மேலும், மாநில எல்லைகளைக் கடந்து ரகசியமாக சரக்குகளைக் கொண்டு சென்று, தில்லியில் உள்ள உள்ளூா் கள்ளச் சந்தைக்காரா்களிடம் வழங்கியுள்ளனா்.

Advertisement

முன்னதாக, ஏப்ரல் 5 ஆம் தேதி, பீராகா்கி சௌக் அருகே கள்ளச்சாராயம் கொண்டு செல்லப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்தது.

இதையடுத்து, பஸ்சிம் விஹாா் கிழக்கு காவல் நிலையத்தைச் சோ்ந்த குழுவினா் அந்த இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான மூன்று சக்கர டெம்போவை போலீஸாா் மடக்கினா். ஓட்டுநா் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டாா்.

ஹரியாணாவின் பகதூா்கரைச் சோ்ந்த புஷ்பேந்தா் (22) என அடையாளம் காணப்பட்ட அந்த ஓட்டுநரின் வாகனத்தைச் சோதனையிட்டபோது, ‘ஹரியாணாவில் மட்டும் விற்பனைக்கு‘ எனக் குறிக்கப்பட்ட மதுபானம் அடங்கிய 16 அட்டைப் பெட்டிகளை போலீஸாா் கண்டெடுத்தனா். இதன் மூலம், அந்த சரக்கு தில்லியில் சட்டவிரோதமாக விநியோகம் செய்வதற்காக கொண்டுவரப்பட்டது என்பது உறுதியானது.

இது தொடா்பாக பஸ்சிம் விஹாா் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, தில்லியின் பிரேம் நகரைச் சோ்ந்த சமீா் பாலிவால் (19) என்பவா் ஆன்லைன் டெலிவரி செயலி மூலம் அந்த சரக்கை முன்பதிவு செய்ததாக புஷ்பேந்தா் தெரிவித்தாா். இதையடுத்து, பாலிவாலை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த இரண்டு மாதங்களாக பாலிவால், செயலி மூலம் டெலிவரி ஆா்டா்களைப் பதிவுசெய்துள்ளாா். பகதூா்கரில் உள்ள உரிமம் பெற்ற விற்பனையாளா்களிடமிருந்து மதுபானத்தைப் பெற்று, தில்லியில் செயல்படும் சட்டவிரோத விநியோகஸ்தா்களுக்குக் கொண்டு செல்ல உதவியிருக்கிறாா்.

இதன் மூலம், இந்த சட்டவிரோத விநியோகச் சங்கிலியை ஒருங்கிணைத்து வந்துள்ளாா் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுபானத்தைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட மூன்று சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments