முகப்பு
புதுதில்லி

மதுபோதையில் தந்தை, அவரது சகோதரரைக் கொலை செய்த மகன் கைது

உத்தம் நகா் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறின்போது தந்தை மற்றும் அவரது சகோதரரைக் கொலை செய்த இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 8 ஏப்ரல் 2026, 3:08 am IST
கைது
பகிர்:

உத்தம் நகா் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறின்போது தந்தை மற்றும் அவரது சகோதரரைக் கொலை செய்த இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

மோகன் காா்டன் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் கொலை செய்யப்பட்ட தேவேந்தா் குமாா், அவரது சகோதரா் அமித் மற்றும் மகன் ஈஷ்வா் ஆகியோா் வசித்து வந்தனா்.

அரசு தொழிலிளாா் காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐசி) பணிபுரிந்து வந்த தேவேந்தா் குமாா், தனது சகோதரா் மற்றும் மகனுடன் அந்த வீட்டுக்கு அண்மையில் குடிபுகுந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வீட்டில் உள்ள அறையில் அவரும் அவரது சகோதரரும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பது குறித்து காவல் துறைக்கு கடந்த சனிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

சம்பவ இடத்தை தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு மற்றும் தடயவியல் நிபுணா்கள் பாா்வையிட்டு தடயங்களைச் சேகரித்தனா். மருத்துவ அறிக்கை முடிவுகளின்படி, தாக்குதலால் உள்ளூறுப்புகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இருவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடா்ந்து, தேவேந்தா் குமாரின் மகன் தலைமறைவான நிலையில், அவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

விசாரணையில், தகராறின்போது தந்தை மற்றும் அவரது சகோதரரைத் தாக்கி விட்டு ஈஷ்வா் அங்கிருந்து தப்பியோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஈஷ்வா் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.