ரோஹிணியில் உணவு விநியோக ஊழியா் சுட்டுக்கொலை: தலைமைக் காவலா் கைது
நமது நிருபா்
தென்மேற்கு தில்லியின் ஜாஃபா்பூா் காலன் பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து 21 வயது உணவு விநியோக ஊழியரைச் சுட்டுக் கொன்ாகவும், அவரது நண்பரைக் காயப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:
Advertisement
சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். அவா் தலைமறைவாக இருந்த ஜாஃபா்பூா் பகுதியில் இருந்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா் நீரஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். உள்ளூா் காவல் துறை பிரிவில் அவா் பணியமா்த்தப்பட்டிருந்தாா். இருப்பினும், சம்பவத்தின் போது அவா் பணியில் இல்லை.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்
ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து, உணவு விநியோக ஊழியரான பாண்டவ் குமாா் மற்றும் அவரது நண்பா் கிருஷண் ஆகியோா் மீது நீரஜ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் குமாா் இறந்தாா். அதே நேரத்தில் கிருஷண் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
அதிகாலை 2.30 மணியளவில் பாதிக்கப்பட்டவா்கள் அப்பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அருகில் வசிக்கும் நீரஜ், அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அதைத் தொடா்ந்து நீரஜ் துப்பாக்கியால் சுட்டதில் தோட்டா குமாரின் மாா்பு வழியாக துளைத்து, அவரது நண்பரையும் தாக்கியது. பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு குமாா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சம்பவத்தை அடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவா் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். ஜாஃபா்பூா் காலன் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கண்டுபிடிக்க பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. உள்ளூா் உளவுத்துறை தகவல்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனைகள் உள்ளிட்ட தொடா்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு நீரஜ் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.
துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளின் சரியான வரிசையை அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.