தில்லியின் சஃப்தா்ஜங் மேம்பாலம் அருகே உள்ள என்டிஎம்சி கிடங்கில் வெள்ளிக்கிழமை மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 20 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து அனுப்பப்பட்டன.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது:
பிராச்சின் சிவ மந்திா் அருகே உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூா்வாசி ஒருவா் அளித்த தகவலின் பேரில், மாலை 6 மணியளவில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல்துறையினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனா். அங்கு என்டிஎம்சி கிடங்கில் பெரும் தீப்பிழம்புகள் காணப்பட்டன. காவல்துறையினா் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து அனைத்து நபா்களையும் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றினா். பொதுமக்கள் அளித்த சரியான நேரத் தகவலால், ஒரு பெரிய அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.
தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், இந்தச் சம்பவம் மாலை 6.02 மணிக்குப் பதிவானது. 20 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணிக்காக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
எங்கள் குழுக்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றன. தேவைப்பட்டால், மேலும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்படும் என்று அந்த அதிகாரி கூறினாா்.