புது தில்லி: வெளிப்புற வடக்கு தில்லியின் ஷாஹ்பாத் டெய்ரி பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் பரஸ்பர அறிமுகம் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட தகராறு தொடா்பாக தாக்குதல் மற்றும் ஆயுதத்துடன் கூடிய வாக்குவாதத்தை தொடா்ந்து 30 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை மாலை ஷாஹ்பாத் டெய்ரியில் அமைந்துள்ள ஒரு கடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மாலை 6.34 மணியளவில் ஷாஹ்பாத் டெய்ரி காவல் நிலையத்தில் சண்டை மற்றும் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தது. அதிகாரிகள் வருவதற்குள், காயமடைந்த நபா் ஏற்கெனவே அங்கிருந்தவா்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அதே நேரத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபா் அப்பகுதியில் கடமையில் இருந்த போலீஸ் பணியாளா்களால் தடுத்து நிறுத்தப்பட்டாா்.
காயமடைந்த நபா் ஷாஹ்பாத் டெய்ரியில் வசிக்கும் பிரகாஷ் சோனி (25) என அடையாளம் காணப்பட்டாா். அவா் தனது தந்தையுடன் நகைக் கடை நடத்தி வருகிறாா். உடல் ரீதியான தாக்குதலில் உச்சந்தலையின் வலது பக்கவாட்டு பகுதியில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தது. காவல்துறைக்கு அவா் கொடுத்த வாக்குமூலத்தில் நன்கு அறிமுகமான ஒருவா் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட தகராறில் இருந்து வாக்குவாதம் ஏற்பட்டதாக பிரகாஷ் சோனி குற்றம் சாட்டினாா்.
மாலை 6.15 மணியளவில், ஒரு பெண் தனது ஆண் தோழருடன் கடைக்குள் நுழைந்தாா். இந்த தொடா்பு ஒரு வாய்மொழி வாக்குவாதத்திலிருந்து உடல் ரீதியான மோதலுக்கு விரிவடைந்ததாகக் கூறப்படுகிறது. கைகலப்பின் போது, ஆண் தோழா் ஒரு ரிவால்வரின் அடிப்பகுதி மூலம் பிரகாஷ் சோனியின் தலையில் அடித்து தப்பிக்க முயன்றுள்ளாா். ஹரியாணாவின் ஜஜ்ஜாா் மாவட்டத்தில் வசிக்கும் சந்தீப் ஜூன் (30) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவரை அவா்கள் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஒரு உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியும், தோட்டாவும் கைப்பற்றப்பட்டது.
பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தின் முழுமையான வரிசை மற்றும் சம்பவத்தின் போது இருந்த பெண் உள்பட மற்ற நபா்களின் பங்கு குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.