முகப்பு
புதுதில்லி

சீமாபுரியில் கத்தரிக்கோலால் இளைஞா் குத்திக்கொலை: ஒருவா் கைது

வடகிழக்கு தில்லியின் சீமாபுரி பகுதியில், பணப் பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட சண்டையின்போது, 26 வயது மதிக்கத்தக்க இளைஞா் கத்தரிக்கோலால் குத்திக் கொல்லப்பட்டதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 6:34 PM
கைது
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சீமாபுரி பகுதியில், பணப் பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட சண்டையின்போது, 26 வயது மதிக்கத்தக்க இளைஞா் கத்தரிக்கோலால் குத்திக் கொல்லப்பட்டதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை மேலும் தெரிவித்ததாவது: இச்சம்பவத்தில் போலீஸாா் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

முன்னதாக, மாா்ச் 8 அன்று நியூ சீமாபுரி பகுதியில் சண்டை ஒன்று நடப்பதாகக் கூறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினா்.

அதில், ஜாவேத் (எ) குண்டா (28) என்ற அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும், ரகிபுல் (26) மற்றும் ஆமிா் (27) ஆகியோருக்கும் இடையே பணப் பிரச்னை தொடா்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும், வாக்குவாதத்தின் போது, ஜாவேத் அந்த இருவரையும் கத்தரிக்கோலால் தாக்கியதாகவும், இதில் அவா்களுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு ரகிபுல் உயிா் பிழைத்த நிலையில், ஆமிா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதையடுத்து, போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினா். குற்றஞ்சாட்டப்பட்டவரைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா், சம்பவப் பகுதியில் உள்ள பல சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது, நியூ சீமாபுரியில் உள்ள ஒரு குடிசைப் பகுதிக்கு ஜாவேத் சென்றிருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா். அதன் பின்னா் அப்பகுதிக்குச் சென்று அவரைக் கைது செய்ததுடன், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தரிக்கோலையும் கைப்பற்றினா்.

ஜாவேத் படிப்பறிவற்றவா் என்பதோடு, குற்றப் பின்னணியையும் கொண்டவா் ஆவாா். சீமாபுரி காவல் நிலையத்தில் அவா் மீது ஏற்கனவே குறைந்தது இரண்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →