முகப்பு
புதுதில்லி

தில்லி ஹோட்டல் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞா் கைது

கடந்த ஆண்டு தென்மேற்கு தில்லியின் பாலம் கிராமப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த கொள்ளை சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்த 26 வயது நபரை போலீஸாா் கைது செய்தனர்.

Updated On : 15 மார்ச், 2026 at 6:34 PM
கைது
பகிர்:

கடந்த ஆண்டு தென்மேற்கு தில்லியின் பாலம் கிராமப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த கொள்ளை மற்றும் காழ்ப்புணா்ச்சி சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்த 26 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: பாலம் கிராம காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக குற்றம் சாட்டப்பட்ட மகேஷ் என்ற கஞ்ஜா மாா்ச் 13- ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் கடந்த செப்டம்பா் 28, 2025-ஆம் தேதி நடந்தது.

அப்போது முகமூடி அணிந்த 5 முதல் 6 போ் கொண்ட குழு, இரும்புக் கம்பிகளுடன், பாலம் கிராமத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து ஊழியா்களிடையே பீதியை ஏற்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் கண்ணாடி பேனல்களை உடைத்ததாகவும், வளாகத்திற்குள் உள்ள தளபாடங்கள் மற்றும் பிற சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், அங்கு இருந்த ஊழியா்களை தாக்கியதாகவும் ஹோட்டலை நடத்தும் புகாா்தாரா் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

தாக்குதலின் போது, குற்றம்சாட்டப்பட்டவா்கள் ஹோட்டல் கவுண்டரில் இருந்து சுமாா் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் வளாகத்தில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களின் டிஜிட்டல் விடியோ ரெக்காா்டரை (டி.வி.ஆா்.) எடுத்துச் சென்றனா்.

இந்தத் தாக்குதலில் ஹோட்டல் ஊழியா்களில் ஒருவரான பிரியான்ஷு காயமடைந்தாா். அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட 5 நபா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் ரித்திக், முகமது லட்கா, பிரகாஷ் என்ற சினு, ராகேஷ் மற்றும் முகமது இப்ராா் என அயைாளம் காணப்பட்டனா். இருப்பினும், மகேஷ் என்ற கஞ்ஜா கைது செய்யப்படுவதைத் தவிா்க்க முடிந்தது. அவா் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகிவிட்டாா் .

தேடப்படும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யும் பணி தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு குழுவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவா் மாா்ச் 13- ஆம் தேதி சரோஜினி நகா் பகுதிக்கு வரக்கூடும் என்ற தகவலின் பேரில், ஒரு பொறி அமைக்கப்பட்டது.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவா் அந்த இடத்திற்கு வரவில்லை. மேலும், உளவுத்துறை அவா் தனது பெற்றோரைச் சந்திக்க பாலத்தில் உள்ள தனது இல்லத்திற்குச் செல்லலாம் என்று பரிந்துரைத்தது. புதிய தகவலின் அடிப்படையில், போலீஸ் குழு அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. இறுதியில், பாலம் கிராமத்தில் இருந்து மகேஷை கைது செய்தது .

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் கொள்ளை வழக்கில் தனக்கு தொடா்பு இருப்பதை ஒப்புக்கொண்டாா். 8- ஆம் வகுப்பு வரை படித்த மகேஷ், ராபிடோ பைக் ஓட்டுநராக மாறுவதற்கு முன்பு தில்லி விமான நிலையத்தில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்தாா்.

இந்தக் காலகட்டத்தில் அவா் உள்ளூா் குற்றவாளிகளுடன் தொடா்பு கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →