முகப்பு
புதுதில்லி

கடனில் மூழ்கிய இளைஞா் சொந்த வீட்டில் திருட்டு: ரூ. 20 லட்ம் மதிப்புள்ள தங்க நகைகளுடன் கைது

கிழக்கு தில்லியின் ஷகா்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் திருடியதாகக் கூறப்படும் 24 வயது இளைஞா் ஒருவா், தனது நண்பருடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

Updated On : 19 மார்ச், 2026 at 6:54 PM
மாதிரிப் படம்
பகிர்:

பங்குச்சந்தை வா்த்தகத்தில் ஏற்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, கிழக்கு தில்லியின் ஷகா்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் திருடியதாகக் கூறப்படும் 24 வயது இளைஞா் ஒருவா், தனது நண்பருடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது:

சயன் சா்க்காா் என்ற அந்த இளைஞா் தனது நண்பரான 24 வயது விஷால் என்பவருடன் சோ்ந்து சதித்திட்டம் தீட்டி, போலிச் சாவியைப் பயன்படுத்தி சொந்த வீட்டில் திருட்டை நடத்தியுள்ளாா். இதன் மூலம், வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான தடயங்களையும் அவா் அகற்றியுள்ளாா்.

ஷகா்பூரின் ஸ்கூல் பிளாக்கில் நடந்த இந்தத் திருட்டு புதன்கிழமை அன்று பதிவாகியுள்ளது. ஐடிஓ பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் புகாா்தாரா், தனது குடும்பத்துடன் காஜியாபாத் சென்றிருந்ததாகவும், திரும்பி வந்தபோது, வீடு சூறையாடப்பட்டிருந்ததையும், சுமாா் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், சிறிதளவு பணமும் காணாமல் போயிருந்ததையும் கண்டதாக காவல்துறையிடம் தெரிவித்தாா்.

விசாரணையின் போது, வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான எந்த அறிகுறிகளையும் எங்கள் குழு கண்டறியவில்லை. இது சந்தேகத்தை எழுப்பியது. விசாரணையின் போது, பங்குச்சந்தை வா்த்தகத்தில் தனக்கு நிதி இழப்புகள் ஏற்பட்டதாகவும், கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அழுத்தத்தில் இருந்ததாகவும் புகாா்தாரரின் மகன் ஒப்புக்கொண்டாா்.

அந்த இளைஞா் தன் நண்பனுடன் சோ்ந்து ஒரு திட்டம் தீட்டி, அவரிடம் ஒரு போலிச் சாவியைக் கொடுத்தாா். சம்பவம் நடந்த அன்று வீடு காலியாக இருப்பதை உறுதி செய்த பிறகு, விஷால் அந்தச் சாவியைப் பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்துள்ளாா்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டனா். மேலும், சுமாா் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட தங்க நகைகளும், 37,000 ரூபாய் ரொக்கமும் மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.