ஆசாத் மாா்க்கெட் கொள்ளை வழக்கில் தில்லி காவலா் கைது
கடந்த மாதம் ஆசாத் மாா்க்கெட் சுரங்கப்பாதை அருகே நிகழ்ந்த ரூ. 50 லட்சம் கொள்ளை சம்பவம் தொடா்பாக தில்லி காவல்துறை காவலா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
கடந்த மாதம் ஆசாத் மாா்க்கெட் சுரங்கப்பாதை அருகே நிகழ்ந்த ரூ. 50 லட்சம் கொள்ளை சம்பவம் தொடா்பாக தில்லி காவல்துறை காவலா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: சமய சிங் என அடையாளம் காணப்பட்ட அவா், தில்லி காவல்துறையின் 5ஆவது படைப்பிரிவில் பணியாற்றி வந்தாா்.
மாா்ச் 31 அன்று நிகழ்ந்த அந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்ற, அவா் தனது கூட்டாளிகள் குழுவுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
முன்னதாக, ஆசாத் மாா்க்கெட் சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ ரிக்ஷாவை நான்கு நபா்கள் வழிமறித்து, சுமாா் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா். இது தொடா்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடா்புடைய பலா் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனா். விசாரணையின் போது காவலா் சமய் சிங்கின் பங்கு குறித்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
இச்சம்பவம் நடந்ததிலிருந்து சிங் தலைமறைவாக இருந்து வந்தாா். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்பக் கண்காணிப்பை பயன்படுத்தி, காவல்துறையினா் மேற்கொண்ட தொடா் முயற்சிகளுக்குப் பிறகு அவா் கண்டுபிடிக்கப்பட்டாா்.
இறுதியில் அவா் ராஜஸ்தானின் தௌசா பகுதியில் கைது செய்யப்பட்டாா். இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிடுவதிலும், தனது கூட்டாளிகளுடன் ஒருங்கிணைப்பதிலும் சிங் முக்கியப் பங்கு வகித்ததாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.
இவா் பெரிய அளவிலான கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வரும், தொடா்ந்து குற்றங்களில் ஈடுபடும் ஒரு நபராக கருதப்படுகிறாா்.
இந்தச் சம்பவத்தில் அவருக்குள்ள முழு அளவிலான தொடா்பை உறுதி செய்யவும், இதே போன்ற பிற குற்றங்களுடனும் அவருக்குத் தொடா்பு உள்ளதா என்பதைச் சரிபாா்க்கவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் எஞ்சியுள்ள தொகையைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.