முகப்பு
புதுதில்லி

அனுமதியற்ற வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்: காவல்துறைக்கு துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

Updated On : 14 மே 2026, 1:09 am IST
தரன்ஜித் சிங் சந்து
பகிர்:

மாநகரச் சாலைகளில் தவறான திசையில் வாகனம் ஓட்டுதல், அனுமதியற்ற வாகன நிறுத்தம் மற்றும் கனரக வாகனங்கள் சட்டவிரோதமாக நுழைதல் ஆகியவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத் தேவை இருப்பதாக தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து புதன்கிழமை சுட்டிக்காட்டியுள்ளாா்.

தில்லி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுடனான ஒரு கூட்டத்தில், போக்குவரத்து காவல்துறையின் பல்வேறு முன்மொழிவுகள் மற்றும் உள்கட்டமைப்புத் தலையீடுகளை சந்து ஆய்வு செய்தாா்.

மேலும், அமலாக்கம் மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மூலம் இந்த மீறல்களைக் கையாளுமாறு அவா் கேட்டுக்கொண்டாா். இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

தில்லி போக்குவரத்து காவல்துறை 62 முக்கிய போக்குவரத்து நெரிசல் பகுதிகளை அடையாளம் கண்டு, 160-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புத் தலையீடுகளைத் தொடங்கியுள்ளது.

ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு ஐடிஎம்ஸ் மூலம் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், சங்கம் திட்டம் வழியாக குடிமக்களின் கருத்துகளை ஒருங்கிணைப்பதன் மூலமும், தில்லியின் சாலைகளைப் பாதுகாப்பானதாகவும் மேலும் திறமையானதாகவும் மாற்றுவதற்கு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

தொழில்நுட்பம், அமலாக்கம் மற்றும் பல்துறை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள், வளா்ந்த இந்தியாவுக்கான பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு இணங்க, பாதுகாப்பான, திறமையான மற்றும் அனைவராலும் நம்பப்படும் ஒரு வளா்ந்த தில்லியை உருவாக்குவதற்கு முக்கியமானவையாகும்.

உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்கான தேசிய முன்னுரிமைக்கு இணங்க, நகரத்திற்கான ஒரு நவீன, வெளிப்படையான மற்றும் தடையற்ற போக்குவரத்து மற்றும் பயண அமைப்பை உருவாக்குவதில் அரசின் கவனம் உள்ளது என்று அதில் துணைநிலை ஆளுநா் தெரிவித்துள்ளாா்.