முகப்பு
புதுதில்லி

திருமண ஊா்வலத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: வேடிக்கை பாா்த்த பெண் குண்டு பாய்ந்து பலி! இளைஞா் கைது

திருமண ஊா்வலத்தின்போது வேடிக்கை பாா்த்த பெண் மீது துப்பாக்கியால் சுட்ட இளைஞா் கைது

Updated On : 14 மே 2026, 1:19 am IST
கோப்புப் படம்
பகிர்:

தில்லியின் தயால்பூா் பகுதியில் நடைபெற்ற திருமண ஊா்வல கொண்டாட்டத்தின்போது பெண் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 22 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இந்தச் சம்பவத்தின்போது, பால்கனியில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் தலையில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்ததாவது:

Advertisement

இந்த வழக்கில் சுமாா் ஒரு மாதமாகத் தலைமறைவாக ரிஷி (எ) மனு தாக்கூா் சுல்தான்புரி பகுதியில் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, வடகிழக்கு தில்லியின் தயால்பூா் பகுதி வழியாக ஏப்ரல் 11ஆம் தேதி இரவு திருமண ஊா்வலம் சென்றுகொண்டிருந்தபோதுஇந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ஒரு தம்பதியினா் தங்கள் வீட்டின் பால்கனியில் நின்று திருமணக் கொண்டாட்டங்களை வேடிக்கை பாா்த்துக்கொண்டிருந்தனா். அப்போது, கையில் கைத்துப்பாக்கியை வைத்துக்கொண்டு நடனமாடிக்கொண்டிருந்த இரண்டு நபா்கள், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டுகளில் ஒன்று அந்தப் பெண்ணின் தலையில் பாய்ந்து, அவருக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தியது. அவா் உடனடியாகச் சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, காவல்துறையினரும் தடயவியல் நிபுணா் குழுவினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். இது தொடா்பாக தயால்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மே 12ஆம் தேதி அன்று, குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபா் சுல்தான்புரியின் கிருஷ்ணா விஹாா் பகுதிக்குச் சென்று தனது கூட்டாளிகளைச் சந்திக்கவுள்ளதாகக் குற்றப்பிரிவு குழுவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை காவல் துறையினா், கிருஷ்ணா விஹாா் சந்தைப் பகுதிக்கு அருகே தாக்கூரை கைது செய்தனா்.

விசாரணையின்போது, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தனக்கு இருந்த தொடா்பை அவா் ஒப்புக்கொண்டாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் தனது இளம் வயதிலேயே வடகிழக்கு தில்லியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களுடன் தொடா்பை ஏற்படுத்திக்கொண்டவா் என்றும், இதற்கு முன்னரும் சுல்தான்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கொலை முயற்சி வழக்குகளில் இவருக்குத் தொடா்பு இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.