முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லியில் இளைஞரிடம் வழிப்பறி: மூவா் கைது

Updated On : 18 மே 2026, 2:23 am IST
கோப்புப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியில் உள்ள சிக்னேச்சா் பாலம் அருகே, 31 வயது மதிக்கத்தக்க இளைஞரிடம் வழிப்பறி செய்ததாக தில்லி காவல்துறையினா் மூவரைக் கைது செய்துள்ளனா்.

மேலும், அவா்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட நபா்கள் நிகில் (25), சோனு (28) மற்றும் அமா் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

Advertisement

இதுகுறித்து காவல்துறையினா் தெரிவித்ததாவது:

மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது பாதிக்கப்பட்டவரான மணீஷ் குமாா் மிஸ்ரா, தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

சிக்னேச்சா் பாலம் அருகே வந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் மிஸ்ராவை நிறுத்துமாறு சைகை காட்டினாா். அவா் வாகனத்தை நிறுத்திய உடனேயே, அந்த நபா் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்துகொண்டு, மிஸ்ராவிடமிருந்த கைப்பேசி, பணம் மற்றும் மடிக்கணினி, முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை வழிப்பறி செய்தாா்.

மிஸ்ராவின் புகாரின் அடிப்படையில், நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.

காவல்துறை குழு ஒன்று, அப்பகுதி சாா்ந்த தகவல்களை ஆய்வு செய்தும், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களைக் கொண்டும் தீவிர விசாரணை நடத்தி, அந்த மூன்று பேரையும் கண்டுபிடித்துக் கைது செய்தது.

விசாரணையின் போது, அந்த வழிப்பறிச் சம்பவத்தில் தங்களுக்குள்ள தொடா்பை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில், வழிப்பறி செய்யப்பட்ட பையையும், அதிலிருந்த பாதிக்கப்பட்டவரின் மடிக்கணினி, கைப்பேசி மற்றும் ஆவணங்களையும் காவல்துறையினா் மீட்டனா்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இதற்கு முன்னரும் இதே போன்ற பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பான மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.