மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது...-
மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது...-சின்னப்பா கணேசன்; பக். 368; ரூ. 350; சோழன் பதிப்பகம், சென்னை- 100; 90923 45641, 97899 65475.
பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உலக அளவில் விரிவடைந்தாலும் தமிழகத்தில் செல்லுபடி ஆகாமல் இருக்கிறது. அது ஏன் என்ற கேள்விக்குப் பதில்தான் இந்த நூல்.
தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் எதிர்ப்பு, மாய பிம்பம் என்று கூறும் நூலாசிரியர், தமிழகத்துக்கு மோடி அளிக்கும் முக்கியத்துவத்தை நூல் முழுவதிலும் விளக்கி இருக்கிறார்.
சிறிய பத்திகளுடன் கூடிய எளிய எழுத்துநடை, கோவையான சித்திரிப்புகள், கவனமாக அளிக்கப்பட்டுள்ள அடிப்படைத் தரவுகள், படிக்கத் தூண்டும் சரித்திர நிகழ்வுகள், இவை அனைத்தையும் லாகவமாகக் கட்டுரையில் இணைத்திருக்கும் பாங்கு, நல்ல அச்சுப் பதிப்பு என இந்நூலின் சிறப்புகளைப் பட்டியலிடலாம்.
பாஜகவினரே அறியாத பல புள்ளிவிவரங்களை ஒரே நூலில் 27 கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தேசிய அளவில் இரண்டாமிடம் வகிப்பது தமிழகம்; சென்ற ஆண்டு வழங்கப்பட்ட நூறு பத்ம விருதுகளில் தமிழர்கள் பெற்றவை 12; சென்ற நிதியாண்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ. 8 லட்சம் கோடி;
பிரதமரின் விவசாய கெளரவ நிதி பெறுவோரில் 37 லட்சம் பேர் தமிழக விவசாயிகள் - இதுபோன்ற தகவல்கள் பலர் அறியாதவை.
இந்த நூல் பாஜக உறுப்பினர்களுக்குக் கையேடாகவும், அதனை எதிர்க்கும் பிற கட்சியினருக்கு சுய பரிசோதனை செய்யப் பயன்படும் ஆய்வேடாகவும் விளங்குகிறது. மொத்தத்தில் அரசியல் ஆர்வலர்கள் அறிய வேண்டிய விஷயங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.