என் காந்திய வாழ்வியலுக்கு உரம் ஊட்டியவர்கள்
என் காந்திய வாழ்வியலுக்கு உரம் ஊட்டியவர்கள் - சூ.குழந்தைசாமி; பக். 440; ரூ.525; காந்தி அமைதி நிறுவனம், 332 அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18.
காந்தி அமைதி நிறுவனத்தின் செயலாளரான நூலாசிரியர், குருகுலக் காந்திய தவச்சாலையில் பெற்ற சத்திய ஒழுக்க வேள்வியில் உதித்தவர். காந்திய சிந்தனைகளை தனதுவாழ்நாள் முழுவதும் பரப்புவதற்காகவே அர்ப்பணித்தவர். அவர் எழுதிய பல நூல்களில், இந்த நூல் தனித்துவம் பெற்றிருக்கிறது.
தான் காந்திய வாழ்வியலுக்கு வரக் காரணமாக இருந்த 100-க்கும் மேற்பட்டோர் பற்றிய குறிப்புகளுடன் நூலை எழுதியுள்ளார். மொத்தத்தில், 104 கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன.
காந்திய மாமணி டி.டி.திருமலை தொடங்கி, மக்கள் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தன் பெற்றோர், உறவினர்கள், இசைக் கலைஞர்கள், தொழிலாளர்கள், காந்தியின் கொள்கைகளை இன்றும் பின்பற்றுபவர்கள், அவரைப் பற்றியே சிந்திப்பவர்கள் என பலர் நூலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களோடு பழகிய சம்பவங்களையும் நூலாசிரியர் எடுத்துரைப்பது சிறப்பு.
காந்திய மெய்ப்பொருளியல், காந்திய வாழ்வியல், நாட்டின் அரசியல், மக்கள் சமுதாயவியல், காந்தியச் சிந்தனையாளர்களின் கொள்கை மாண்பு என பல்வேறு பரிணாமங்களைப் பெற்றதாக இந்த நூல் விளங்குகிறது.
இருள்மண்டிக் கிடக்கும் மக்கள் மனம் மாண்புற மகாத்மாவின் வாழ்வியல் மக்களிடையே உலா வர வேண்டும். அதற்காக ஊர் கூடி தேர் இழுக்கும் உன்னத உழைப்பை நூலாசிரியர் அளித்துள்ளார். இந்த நூலைப் படித்தால், தனக்கு மட்டுமல்ல; சமுதாய முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம் என்பது ஐயமில்லை.