ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும் (1815-1945)
நூல் அரங்கம்ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும் (1815-1945)
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும் (1815-1945) - எம்.பி.இராமன்; பக்.344; ரூ.360; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் - 629001; 04652-278525.
கி.பி. 1815 முதல் 1945 வரையிலான புதுச்சேரியின் வாழ்க்கைத் தரம், அரசியல் நிர்வாகம், நடைமுறைகள், பிரெஞ்சு அறிஞர்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியன குறித்து ஆய்வு நோக்கில் இந்நூல் பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் வெப்ப மண்டலச் சூழல் நோய்கள் குறித்த அச்சம் ஐரோப்பியர்களுக்கு இருந்தது. ஐரோப்பியப் பாணியில் உடையணிந்தவர்களுக்கு புழுக்கமான சூழலில் பணிபுரிவது கடினமாக இருந்தது. அதனாலேயே ஃபிரெஞ்சு ஆளுநர்கள் புதுச்சேரியில் மரங்கள் நடுவதை ஊக்குவித்தனர். கடற்கரையில் தூய்மையைப் பேணும் பொருட்டு குதிரைச் சவாரிகளும் வண்டிப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன.
பிரான்ஸ் நாட்டை பூர்விகமாகக் கொண்ட நீரியல் பொறியாளர் யூனியன் வேன்சான் தமிழ் இலக்கணத்தை ஃபிரெஞ்சில் எழுதியதோடு மட்டுமல்லாது, கம்பராமாயணம் குறித்து ஃபிரெஞ்சில் இவர் எழுதிய நூல்கள் தமிழின் பெருமையை ஃபிரெஞ்சு இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தின. இவருக்கும், உ.வே.சாமிநாதையருக்கும் இடையேயான கடிதப் போக்குவரத்து, பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே இருந்த ஆர்வத்தையும் பங்களிப்பையும் எடுத்தியம்புகின்றன. உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராக, பாரதியார் தெரிவித்த கருத்துகளை இந்நூல் பதிவு செய்துள்ளது.
இறைத் தொண்டுக்காக தேவதாசிகள் அர்ப்பணிக்கும் வழக்கத்தை உயர்வாக விவரிக்கும் இந்நூல், ஐரோப்பியர்களின் வருகையால் தேவதாசிகள் செல்வாக்கு இழந்ததையும் குறிப்பிடுகிறது. 130 ஆண்டுகால வரலாற்றை விறுவிறுப்பான நடையில் பொருத்தமான படங்களுடன் இணைத்திருப்பது சிறப்பு.