வியக்கவைக்கும் பழந்தமிழர் சிந்தனைகள்
நூல் அரங்கம்வியக்கவைக்கும் பழந்தமிழர் சிந்தனைகள்
வியக்கவைக்கும் பழந்தமிழர் சிந்தனைகள்-மாத்தளை சோமு; பக். 296; ரூ. 300; தமிழ்க்குரல் பதிப்பகம், 15 ஐந்தாவது மெயின் ரோடு, ஞானம் காலனி, ராமலிங்க நகர், திருச்சி - 620 003.
தமிழரின் வாழ்வியல் ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதை அண்மைக்கால அகழாய்வுகள் மெய்ப்பிக்கின்றன. சிந்தனை மரபில் தமிழர்கள் தனித்துவம் மிக்கவர்கள் என்பதை தொல்காப்பியம் முதலிய பழந்தமிழ் நூல்கள் எடுத்துரைக்கின்றன. அறம், கடவுள், மன்னன், கல்வி, வணிகம், உலகம், மண்ணியல், உழவியல், நீர் மேலாண்மை, அறிவியல், மருத்துவம்,
மனித உரிமை ஆகியன குறித்து 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
தமிழுக்குள் பல மரபுகள் ஊடாடியிருந்தாலும், தமிழர் சிந்தனை மரபுகளையெல்லாம் உட்செரித்து தனது தனித்துவத்தைத் துலக்கமுறக் காட்டுகிறது என்பதை பழந்தமிழ் இலக்கியத் தரவுகளோடு நிறுவியுள்ளார் நூலாசிரியர்.
குறிப்பாக, அறம் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தாலும், இன்றைய சட்டமே அன்றைய அறம் என்று குறிப்பிடுகிறார். மக்களுக்கு தண்டனை அளிப்பதில் அறநெறிப்படியே மன்னர்கள் நடந்துகொண்டார்கள் என்கிறார். மேலும், 'அற முதலாகிய மும்முதற் பொருட்கும்' என்ற தொல்காப்பியச் சூத்திரத்தின் மூலம் தொல்காப்பியருக்கு முன்பே அறத்தைப் பற்றிப் புலவர்கள் பேசியுள்ளனர் என்று குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியர் 'கடவுள்' என்ற சொல்லைக் கையாண்டபோதும், பின்னர் வந்த திருவள்ளுவர் 'கடவுள்' என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆனால், அதற்கு மாற்றாக "இறைவன்', 'தெய்வம்' ஆகிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்று நூலாசிரியர் குறிப்பிடுவது சிந்தனைக்குரியது. பெரும்பாலான மேற்கோள்கள் சங்க இலக்கியங்களில் உள்ளவை. பழந்தமிழர்க்கு இருந்த தனித்த அறிவுத்திறத்தைத் தொகுத்துத் தந்திருக்கும் நூலாசிரியரின் உழைப்பு வியக்கவைக்கிறது.