குலம் காக்கும் தெய்வங்கள்
நூல் அரங்கம்குலம் காக்கும் தெய்வங்கள்
குலம் காக்கும் தெய்வங்கள் - அய்கோ; பக். 272; ரூ.300; தனு பதிப்பகம், 16 காந்தி நகர், ரெட்டியார்பட்டி, திருநெல்வேலி- 627 007.
அருஞ்செயல், தங்களை மீறிய ஊழ்வினைக்கு ஆட்பட்டது, கன்னியாய் இருந்து மறைந்தவர்கள், கணவர் இறந்தவுடன் தீப்பாய்ந்து இறந்தவர்கள் போன்றோர் குல தெய்வங்களாய் போற்றப்படுகிறார்கள் என்றும் குலத்துக்கு ஒன்றும், குடும்பத்துக்கு ஒன்றும், இனத்துக்கு ஒன்றுமாய் வழிவழியாக வழிபடப்படுகிறார்கள் எனவும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
இருப்பினும், ஐவகை நிலக் கடவுளர்களின் வழிபாட்டில் உள்ள தெய்வங்களின் கொற்றவையே சக்தியாய், காளியாய், அம்மனாய், மாரியாய் உருவெடுத்தாள் என்றும் இவர்களில் கற்பு, வீரம், காவலில் மேம்பட்ட மானுடப் பிறவிகள் தெய்வநிலைக்கு உயர்ந்தவர்கள் எனவும்- இசக்கி, சுடலை, கருப்பன் போன்ற தெய்வங்கள் இத்தகையவர்களே எனவும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருப்பு, ஐயனார், மதுரை வீரன், பெரியசாமி - போன்றோர் பொதுதெய்வங்களாய் உள்ளனர் என்றும் பொற்கொல்லர்களுக்கு காமாட்சி, நாடார்களுக்கு பத்ரகாளி, மீனவர்களுக்கு குமரி அம்மன், நாயக்கர்களுக்கு ஜக்கம்மாள், சோழிய , கொங்கு வேளாளர்களுக்கு மாசி பெரியண்ணன் குல தெய்வங்களாய் உள்ளதாகவும் நூலாசிரியர் கூறுகிறார்.
கட்டபொம்மனும், ஊமைத்துரையும் புதுக்கோட்டை குமரப்பட்டியில் குலதெய்வங்கள் என்பதும் மரங்கள், சுவர்கள், வீட்டின் திசைகள், ஆறு, குளங்கள் கூட குலதெய்வ வழிபாட்டில் உள்ளன என்பதும் நூலில் கிடைக்கும் ருசிகர தகவல்கள். பத்தினி வழிபாட்டில் தலையான கண்ணகி, இசக்கி இடம்பெறுகின்றனர்.
இவ்வாறாக, 58 கட்டுரைகளில் குலங்களையும், குடிகளையும் அறிய முடிகிறது.