1974 - மாநில சுயாட்சி
நூல் அரங்கம்1974 - மாநில சுயாட்சி
1974 - மாநில சுயாட்சி - மைய - மாநில உறவு ஆய்வுக்குழு (ராஜமன்னார் குழு) அறிக்கை மற்றும் அதுதொடர்பான விஷயங்களின் தொகுப்பு - ஆழி செந்தில்நாதன்; பக். 608; ரூ. 1,000; ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை - 600 093 .
1974 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தீர்மானம், அதன் மீதான விவாதங்களின் உரை ஆகியன நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அரை நூற்றாண்டுக்கு முன்னரே மத்திய, மாநில உறவுகள் அறுபட்டுவிடாமல் சீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து திமுக தலைவரான மறைந்த கருணாநிதி சிந்தித்திருப்பதுடன் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
'ஓர் ஒற்றையாட்சியமைப்பை ஏற்க முடியாத அளவுக்கு, நாடு மாறுபட்ட மரபுகளையும் வேறுபட்ட வரலாறுகளையும் பலதரப்பட்ட மனோபாவங்களையும் கொண்டுள்ளது' என்ற அண்ணாவின் 'காஞ்சி' உயில் சொற்களும், 'நமது அரசியல் சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்; மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும்; இதனை மத்திய அரசு உணர வேண்டும் என்பதே மாநிலங்களின் கோரிக்கைகளாகும்' என்ற நாடாளுமன்றப் பேச்சும் (1963) எந்த அளவு தொலைநோக்குடன் கூடியவை என்பதை நூலின் ஒவ்வொரு பக்கமும் உணர்த்துகிறது.
மைய - மாநில உறவில் ஆளுநரின் பங்கு, சிக்கல் மையமான கூறு என்கிற ராஜமன்னார் குழு அறிக்கை, அவருடைய அதிகாரங்கள் பற்றியும் விரிவாக விவாதித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே அதிகார - நிதிப் பகிர்வுகளில் அதிருப்தி, கருத்து வேற்றுமைகள், வெவ்வேறு கட்சிகள் ஆட்சிபுரியும் இடங்களில் அதிகரித்துவரும் நிலையில் அரசியல் படிப்போர் அனைவருக்குமான நூல்.