நாடும் நாமும்
நாடும் நாமும் - உதயை மு.வீரையன்; பக். 160; ரூ.140; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை -14; 044-28482441.
உயிர்ப்புள்ள பிரச்னைகளை நேர்த்தியாக அணுகும் 29 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
மாமனிதர்கள் உபதேசிப்பதில்லை. வாழ்ந்து காட்டுகிறார்கள். காந்தியத்தின் வெற்றி தாமதம் ஆகலாம். ஆனால், தோல்வியடைவதில்லை என்று 'காந்தியம் தோற்றுவிட்டதா?' கட்டுரையில் நூலாசிரியர் குறிப்பிடுவது காந்தியக் கொள்கைகளின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது.
புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாற்றமும் எதிர்காலத்தில் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும். எங்கேயோ ஓரிடத்தில் பற்றி எரிகிறது என்று நாம் அலட்சியமாக இருக்க இயலாது. அமேசான் காடுகள் அழிக்கப்படுவதும், தீப்பற்றி எரிவதும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரையும் பாதிக்கும். ஏனெனில், உலகில் பத்தில் ஓர் உயிரினம் இந்தக் காடுகளில்தான் உலவுகின்றன என்று சூழலியல் சீர்குலைவு குறித்து "எரிந்த காடுகளும் எரித்த நாடுகளும்' கட்டுரை எடுத்தியம்புகிறது.
அரசியல் கட்சிகள் ஆளும்கட்சியாக மாறிய பிறகு அவை தங்கள் கட்சிக்காரர்களுக்காகவே செயல்படுகின்றன. இதுதான் மக்களாட்சியின் தோல்வி என்று 'மக்களும் மக்களாட்சியும்' கட்டுரை குறிப்பிடுகிறது.
'நமது நாகரிகமானது வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கொண்டது. அவை வீணாவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது' என்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கருத்தை "எழுத்தாளர்களும் படுகொலையும்' என்ற கட்டுரை மேற்கோள் காட்டுகிறது.
அரசியல், சூழலியல், மதம், தேர்தல், இயற்கைச் சீற்றம், கச்சத்தீவு, பஞ்சமி நிலங்கள், காவிரி நீர் பிரச்னை, இணைய சூதாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை விவரிப்பதோடு மட்டுமல்லாது அதற்கான தீர்வையும் நூல் முன்வைக்கிறது.