முகப்பு
நூல் அரங்கம்

தெரிந்து கொள்வோம் மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி!

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

தெரிந்து கொள்வோம் மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி!- வி.எஸ்.நடராஜன், பா.ஹரிசங்கர்; பக். 118; ரூ.150; நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை -10; 81221 02173. 

ஒரு நோயாளி தனது நோய் குறித்து முழு விவரங்களைத் தெரிந்து கொண்டாலே,  பாதி குணமடைந்து விடலாம். எனவே, சிகிச்சைக்கு முன்னோட்டமாகப் பரிசோதனைகள் குறித்து நோயாளிக்குத் தெரிவிப்பது மருத்துவரின் கடமையாகும்.  அவசர உலகில் கால அவகாசம் மருத்துவர்களுக்கு இருப்பதில்லை.

இந்தக் குறையைப் போக்கும் வகையில், பரிசோதனைகள், எதற்கு?  அவற்றின் அளவு என்ன போன்ற பயனுள்ள தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

காலமுறைப்படி மருத்துவப் பரிசோதனை,  அதற்கு  முன்பு என்ன செய்ய வேண்டும், ரத்தம் சார்ந்த நோய்கள், சிறுநீர்/மலம் சார்ந்த நோய்கள், நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகள், இதய நோயை அறியும் பரிசோதனைகள், ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவு, நரம்பியல் சார்ந்த பரிசோதனைகள், கரோனாவும் அதன் பரிசோதனைகளும் என 25 தலைப்புகளில் இயல்பான அளவுகளுடன் இடம் பெற்றுள்ளன.

இயல்பான அளவுக்கு குறைந்திருந்தால்,  நோய்களின் பெயர்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, ரத்தச் சிவப்பணுக்களின் (ஆர்.பி.சி.) இயல்பான அளவு 20 லட்சம் முதல் 50 லட்சம் (2 மில்லியன் முதல் 5 மில்லியன்) வரை,  20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் ரத்த சோகை என்று அறியப்படும் என்ற தகவல் பயனுள்ளது.

'ரத்தப் பரிசோதனைகளின் அளவு' என்ற தலைப்பில் ரத்தம் தொடர்புடைய அனைத்துப் பரிசோதனை முடிவுகளின் இயல்பான அளவு நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ளன. 
தகவல்கள் இளம் மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.  அந்தந்தத் துறை மருத்துவ நிபுணர்களிடமிருந்து பரிசோதனை முறைகளைப் பெற்று,  நூலாசிரியர்கள் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது. எனினும், சுய பரிசோதனை -சுய சிகிச்சை செய்து கொள்வது மிகவும் ஆபத்தானது என்றும்  அவர்கள் எச்சரித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →