சோழவேங்கை கரிகாலன் (பாகம் 1,2)
சோழவேங்கை கரிகாலன் (பாகம் 1,2) - அசோக்குமார்; பக். முதல் பாகம்-500, இரண்டாம் பாகம்-512; ரூ.1,400, விஜயா பதிப்பகம், கோவை-1; 0421-2382614.
சோழகுலம் ஒரு குறுநில அரசிலிருந்து 5 நிலம் முழுவதும் பரவ வழிவகுத்த மாமன்னனின் புகழை மென்மேலும் உயர்த்தும்படியாக, கலைநயமிக்க ஓவியங்களுடன் இந்த நாவல் அமைந்துள்ளது.
சோழவேந்தன் இளஞ்சேட்சென்னி தனது மனைவி இளவெயினிக்காக உருவாக்கியிருந்த மயூரத்தேர், சோழநாட்டின் மீது படையெடுத்து வந்த வம்பர், வடுகர் போன்ற குலத் தலைவர்களை தனது குதிரைப்படையை மட்டும் பயன்படுத்தி தோற்கடித்தது, இந்திர விழாவின்போது சிறைபட்டிருந்த எதிரிநாட்டு வீரர்களையும், பகை மன்னர்களையும் சோழவேந்தன் விடுவித்தது, புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது காவிரித்தாய்க்கு வழிபாடு நடத்தியது, சோழநாட்டின் நான்கு நுழைவுவாயில்களின் சாலைகளிலும் சத்திரங்களும் விருந்தினர் மாளிகைகளும் அமைத்து விருந்தினர்களின் பசியைப் போக்கியது, குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதித்தபோதும் குறைதீர் மன்றங்களை அமைத்தது, மாசாத்துவன் என்ற பெருவணிகரின் செல்வங்களை வம்பர்கள் கொள்ளையடிக்க வரும்போது மாறுவேடத்தில் மன்னரே நேரடியாகப் போரிட்டு வீழ்த்தியது... போன்றவை மக்களைக் காப்பது மன்னரின் கடமை என்பதையும் உணர்த்துகிறது.
அதே வேளையில், தனியாக போருக்குச் சென்றதை அறிந்து மன்னரின் மேல் குடிமக்கள் கொண்டிருந்த அன்பையும் வெளிக்கொணர்கிறது.
வேளாண்மை, உணவு முறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தெளிவாக நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளஞ்சேட்சென்னி சிற்றரசர்களின் வஞ்சகத்தால் கொல்லப்பட்ட பின்னர் அவரது மகன் கரிகாலனை சிறைப்பிடிக்க முயன்ற எண்ணற்ற வீரர்களைக் கொன்று குவித்தது அவரது வீரத்துக்குச் சான்றாகும். நாட்டை அடைய நினைத்த சேர, பாண்டியர்களை போரில் விற்படை, வாட்படையைக் கொண்டு போரை அறத்துடன் நடத்தி வெற்றி பெற்றது போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ள நூல் இது.