தென்னிந்தியாவில் பாபா சாகேப் அம்பேத்கர்
தென்னிந்தியாவில் பாபா சாகேப் அம்பேத்கர் - பேரா. க.ஜெயபாலன்; பக். 336; ரூ.350; பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை-40; 044- 42663840.
அம்பேத்கர் தென் இந்தியாவில் 1932-ஆம் ஆண்டிலிருந்து 1954 வரை மேற்கொண்ட பயணங்கள், நிகழ்ச்சிகளில் அவர் பேசியது, சந்திப்புகள், தருணங்கள் குறித்து நூல் எழுதப்பட்டுள்ளது. 50 தலைப்புகளில் நிகழ்வுகளை சுருக்கமாக, வந்ததன் நோக்கத்தை தெள்ளத் தெளிவாகவும் பதிவு செய்திருப்பது நூலாசிரியரின் சிறப்பு.
ராஜாஜி, காமராஜர், பெரியார் ஈ.வெ.ரா., டி.டி.கிருஷ்ணமாச்சாரி, அண்ணா, இரட்டை மலை சீனிவாசன் உள்ளிட்டோருடனான சந்திப்புகள் வியக்க வைக்கிறது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் அம்பேத்கர் ஆற்றிய உரையில் நாட்டுப் பற்றும், ஒற்றுமை வலியுறுத்துவதும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. 20 வயதிலேயே அம்பேத்கருக்கு வரவேற்பு அளித்த சத்தியவாணி முத்து உள்ளிட்ட அறியாத தகவல் இடம்பெற்றுள்ளது. வாழும் காலத்திலேயே இலக்கியத்துக்காக உஸ்மானியப் பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் அம்பேத்கர் பெற்றுள்ளது அதிசயம்தான் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கர் பார்வையில் பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதச் சுவாமிகள் சந்திப்பு போன்ற கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
அம்பேத்கரை குறிப்பிட்ட ஜாதியத் தலைவராக முன்னிறுத்துவதைத் தவறு என்றும் அவர் பொதுவான தேசியத் தலைவர் என்பதை சுட்டிக் காட்டும் வகையிலும் இந்த நூல் இருக்கிறது. அனைவரும் படித்தறிய வேண்டிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.