பசும்பொன் தேவரும் பராசக்தியும்
பசும்பொன் தேவரும் பராசக்தியும் - எம்.எஸ். பாண்டியன்; பக். 204; ரூ. 200, காவ்யா, சென்னை -24; 044-23726882.
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தொடர்பான 10 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.ஆவணக் காப்பகத்தில் பணிபுரிந்த நூலாசிரியர், இந்த நூலுக்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தியிருப்பது தெரிகிறது.
தலைவர்களை ஜாதிகளுக்குரியவர்களாகப் பார்க்கும் இன்றைய மோசமான சூழ்நிலையில் தேவரைப் பற்றிய தெளிவான ஒரு சித்திரத்தை முன்வைக்கிறது இந்த நூல். எந்தளவு ஆன்மிக ஈடுபாட்டுடன் அவர் திகழ்ந்தார் என்பதை ஒரு சோற்றுப் பதமாக விளக்குகிறது "பசும்பொன் தேவரும் பராசக்தியும்' என்ற முதல் கட்டுரை. மனதின் விருப்பம், பிறப்புச் சங்கிலி, இல்லறம், துறவறம், மரணம் எனத் தேவரின் எண்ணங்கள் அவருடைய சொற்பொழிவுகளிலிருந்து விவரிக்கப்படுகின்றன.
முதுகுளத்தூர் படுகொலைகள் ஜாதி உணர்வால் நடந்தவையல்ல; அரசியல் கொலைகளே என்று தெரிவித்து, அதற்கு முன்னும் பின்னும் நடந்தவற்றையெல்லாம் பட்டியலிட்டுள்ளார் ஆசிரியர்.
சுபாஷ்சந்திர போஸின் அரசியல் நகர்வுகளைப் பற்றி சுருக்கமான ஒரு சித்திரத்தைத் தருவதுடன், அவருக்கும் தேவருக்குமான உறவு பற்றியும் முன்னெடுப்பு பற்றியும் நூலில் விளக்கப்படுகிறது.
ஒரு திருடனைப் பிடிக்க இன்னொரு திருடனை உருவாக்கு என்ற மேற்கோளை விளக்கும் தேவரின் பெருநாழிப் பேச்சும் குற்றப் பரம்பரைச் சட்டம் பற்றிய விளக்கங்களைக் கூறும் உசிலம்பட்டி கள்ளர் இளைஞர் மாநாட்டுப் பேச்சும் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. அவருடைய உரைகளின் வழி தமிழின், தமிழரின், தெய்விகத்தின் சிறப்பை விளக்குகிறது தேவரின் தமிழ் என்ற கட்டுரை.
நிறைவாக, முடிசூடிய பாஸ்கர சேதுபதி, முடிசூடா முத்துராமலிங்கத் தேவர் இருவரையும் ஒப்பிடும் கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது. அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.