தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்
தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள் - க.ப. அறவாணன்; பக். 304; ரூ. 300, தமிழ்க் கோட்டம் பதிப்பகம், சென்னை -29; 9597717485.
அறவாணனின் படைப்புகளில் முதன்மையான இடத்தை வகிக்கிற இந்த நூலின் தலைப்பே உள்ளுறையைத் தெளிவுபடுத்துகிறது.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே, தமிழர்கள் எவ்வாறு வீழ்த்தப்பட்டனர், வீழ்ந்துகிடந்தனர்? மாற்றார் எவ்வாறு அடிமைப்படுத்தினர் என்று மிகச் சிறப்பான சான்றுகளுடன் விவரிக்கிறார் நூலாசிரியர்.
முற்கால மதவழிச் சேர்க்கையும் பிற்கால கட்சிவழிச் சேர்க்கையும் எவ்வாறு தமிழரிடையே மொழிவழித் தேசிய உணர்வு உருவாகவிடாமல் தடுத்தன என்பது காரண காரியங்களுடன் விளக்கப்படுகிறது.
தமிழரின் பெரும்பிணியென போர்க்குணமின்மை, தாழ்வு மனப்பான்மை, அயலாரை, அயல்நாகரிகத்தை, அயல் பண்பாட்டைப் போற்றுதல், தொலைநோக்கின்மை ஆகிய நான்கையும் சுட்டி, எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் ஆசிரியர், தலைவர்கள் மரணங்களின்போது தமிழர்கள் மட்டுமே ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதையும் சான்றுகளுடன் குறிப்பிடுகிறார்.
இனக் கலப்பு, ஆதிக்கம் பற்றி ஒட்டுமொத்த உலகம் தொடங்கி, இந்தியாவிலும் தமிழகத்திலும் என்னென்ன நேர்ந்தன, இவற்றின் இப்போதைய விளைவுகள் என்ன? என்று நூலில் விவாதிக்கப்படுகிறது.
அயல்மொழி ஆதிக்கம் பற்றிக் கூறுகையில், தொடர்ந்து தமிழ் தாழ நேரிட்டதன் காரணங்களை, உலகின் பிற மொழிகளுடன் ஒப்பிட்டு நிறுவுகிறார் ஆசிரியர்.
வெற்றுப் பெருமைகளை விடுத்துத் தமிழர்களின் சமூக - பண்பாட்டு வரலாற்று நிலைமைகளை விரிவாக ஆராயும் இந்த நூலில் உரைக்கப்படும் விஷயங்கள் வாசகர்களிடையே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியவை.
தமிழர், தமிழினம், தமிழ்த் தேசியக் கருத்து நிலையாளர்கள் அவசியம் படித்தறிய வேண்டிய நூல்.