காக்கைச் சிறகினிலே
காக்கைச் சிறகினிலே - பறவைகளின் வண்ணமயமான உலகம்- வ.கோகுலா; பக். 200; ரூ.230; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044 - 4200 9603.
பறவைகள் தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் வெளிவந்துள்ள பல்வேறு நூல்களில் மாறுபட்டது இந்த நூல். அவற்றின் அனைத்து விதமான அம்சங்களையும், அதன் தோற்றுவாய் குறித்தும் அலசுகிறது.
அண்டம் தோன்றிய கதையிலிருந்து ஆதி உயிரினங்கள் உருவெடுத்தது எப்படி, பறவை இனங்கள் தோன்றியது எப்படி என நூலாசிரியர் பல தகவல்களை தந்திருக்கிறார். அதுமட்டுமல்லாது புதை படிம ஆதாரங்கள், அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் 'டைனோசர்' என்ற உயிரினத்திலிருந்துதான் பறவைகள் பரிணாமம் அடையத் தொடங்கியதாகவும் அறுதியிட்டு கூறுகிறார்.
பறவைகள் எவ்வாறு பறக்கின்றன, இறகுகள் தோன்றியது எப்படி உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறது இந்த நூல்.
அண்ணாந்து பார்க்கும்போது அழகாக மட்டுமே தெரியும் ஒரு சிற்றுயிரினத்தின் உடலுக்குள் எத்தனை சிக்கலான கட்டமைப்பு இருக்கிறது என்பதையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார். பறவைகளின் இடம்பெயர்தல் குறித்த கட்டுரை புதிய தகவல்களை அளிக்கின்றன.
இனப்பெருக்கம், முட்டையிட்டு அடைகாத்தல், அதற்கான சூழலைக் கட்டமைத்தல் என பறவைகள் மேற்கொள்ளும் நுட்பமான விஷயங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் பறவைகளின் வாழ்வியலோடு பயணிப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது இந்நூல்.