அடிப்படை மாற்றங்களை நோக்கி
அடிப்படை மாற்றங்களை நோக்கி - க.பழனித்துரை; பக். 144; ரூ.200; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி.) லிட்., சென்னை-50; ✆ 044- 2625 1968.
அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியராகப் பணிபுரிந்த நூலாசிரியர் உள்ளாட்சியை வலுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு குழுக்களில் செயல்பட்டவர்.
அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வந்திருக்கிறது. 'கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது' என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவதன் எண்ணத்தை மேம்படுத்துகிற வகையில், 18 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கிராம மேம்பாடு, ஊராட்சிகளை மேம்படுத்துதல், புதிய சூழல் உருவாக்கம், புதிய அரசியல் உருவாக்கம், ஏழைகள், விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மக்களாட்சியில் ஏற்றம் பெறுதல், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தலைமைத்துவம், , மத்திய- மாநில அரசுத் திட்டங்கள், கல்வி- மருத்துவ மேம்பாடு, மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் என்று பல விவரங்களை மக்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் இந்த நூலின் வாயிலாக அறியலாம்.
கிராம மக்கள் அரசின் வாயிலாக, எவ்வாறு தங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதையும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களுக்கு எவ்வாறு பணியாற்றலாம் என்பதையும் அருமையாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
கிராமப்புற மக்களுக்கு கல்வியை மேம்படுத்துவதன் அவசியத்தை அருமையாக விளக்கியுள்ளார். சமூகச் செயல்பாட்டாளர்களின் அவசியத்தை விளக்கியுள்ள நூலாசிரியர், ஏற்கெனவே மக்களாட்சி மேம்புற பாடுபட்டவர்களின் வரலாற்றையும் விளக்கங்களையும் எடுத்துரைத்துள்ளார்.
நாட்டின் நலனில் அக்கறை கொண்டோர் வாசித்து அறிந்து, பிறருக்கு விளக்கமளிக்க எண்ணற்ற தகவல்கள் நிறைந்த நூல் இது.