அருந்ததியர் வாழும் வரலாறு
அருந்ததியர் வாழும் வரலாறு-மாற்கு, பக்.404, ரூ.560, என்.சி.பி.எச்., சென்னை-50, ✆ 044-28482441.
பின்தங்கிய ஒடுக்கி, அடக்கப்பட்ட மக்களாக வாழும் அருந்ததியர்களின் வாழ்வியல் முறைகளை முழுமையாக விவரிக்கிறது இந்த நூல். அவர்கள் தெலுங்கு பேசுபவர்கள் என்றல்ல; கன்னடம் பேசுவோரும் உள்ளனர். பகடை, சக்கிலியர், மாதாரி, அருந்ததியர் என 4 வகை பெயர்களில் இவர்கள் அழைக்கப்படுவதையும், பெயர் காரணங்களையும், மதுரை வீரன், ஒண்டி வீரன், பொட்டிப் பகடை, முத்தன் பகடை, தாமன் பகடை போன்ற முன்னோர்களின் போர்த் திறன் பற்றியும் இந்த நூல் துல்லியமாக விளக்குகிறது.
ஆதிக்க ஜாதியினர்களிடம் அருந்ததியர்கள் ஒடுங்கி கிடக்கின்றனர் என்பதை படிக்கும் போது, இவர்களுக்கு விடுதலை பெற்றுத்தரப்போவது யார்என்ற கேள்வி படிப்பவர்கள் மனதில் எழுகிறது. ஆதிதிராவிடர்கள்-அருந்ததியர்கள் இடையேயான முரண்கள், அதற்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர்களுடன் அருந்ததியர்கள் காட்டும் இணக்கமான நட்புறவுகளை விளக்கி கிராமங்களில் நிகழும் களச்சூழலையும் விளக்குகிறது.
அருந்ததியர்களின் வரலாறு, வாழ்வியல் முறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு, உறவு முறைகள், அரசியல் என அவர்களை பற்றிய 360 கோண தகவல்களையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்நூல்.