அறம் வளர்த்த அதியமான்
அறம் வளர்த்த அதியமான் - இரவீந்திர பாரதி; பக்.304; ரூ.350; பரிதி பதிப்பகம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் (மா); ✆ 7200693200.
கடையெழு வள்ளல்களில் ஒருவரான மன்னர் அதியமானின் வரலாற்றை கற்பனை கலந்த நாவலாக உருவாக்கியதில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார். 1943 -இல் பிறந்த இரவீந்திர பாரதி, எண்பது வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குபவர் என்பதை இந்த நாவலுக்காக அவர் மேற்கொண்ட ஆய்வுகள் உணர்த்துகின்றன.
வள்ளல் ஓரி, அதியமானுக்கு சகோதரர் முறை என்பதும், நயவஞ்சகமாக போரில் ஓரியை காரி கொன்றதும், கோபத்தில் வெகுண்டெழுந்த அதியமான் போரிட்டு காரியை வென்றதும் இந்த நாவலுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றன.
'பசியை போக்குவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் அறியாமையை போக்குவது' என்று புலவர் கபிலர் கூறுவதாக வரும் கருத்து எக்காலத்துக்கும் பொருத்தமானது.
ஒளவைக்கு நெல்லிக்கனியை தந்த அதியமான் விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர் என்பதை விளக்கும் அத்தியாயத்தில் சொல்லப்படும் தகவல்கள் அதிர்வலையை ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கு சான்று உண்டா? அப்படியே இருந்தாலும் அவை தேவையற்ற காட்சிகள்.
சங்க இலக்கியங்களில் சுமார் 48 பாடல்கள் அதியமானைப் பற்றி பாடப்பட்டுள்ளன. காரி, ஓரி, அதியமான், சேரர்கள் ஆகியோருக்கு இடையில் இருந்த நட்பு எத்தகையது என்பதை விரிவாக இந்நாவல் விவரிக்கிறது. வள்ளல்களின் தனித்தன்மைகளை அறிய உதவும் நூல் இது.