ஆதீனகர்த்தர் கற்றதும் பெற்றதும்
ஆதீனகர்த்தர் கற்றதும் பெற்றதும் - தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்; பக். 184; ரூ.120; திலகவதியார் திருவருள் ஆதீனம், புதுக்கோட்டை; ✆ 97891 82825
தயானந்த சந்திரசேகர சுவாமிகள் மடத்தின் பொறுப்பேற்று இந்த ஆண்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஆதீனகர்த்தரின் வெள்ளி விழா ஆண்டு மலராக வெளிவந்திருக்கிறது, இந்நூல்.
ஆதீனகர்த்தர் எழுதிய அனுபவக் கட்டுரைகள், வெளிநாட்டுப் பயண அனுபவங்கள், பத்திரிகைகளில் வெளியான திருமடச் செய்திகள், ஆதீனகர்த்தர் தொடர்பான புகைப்படப் பதிவுகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது. பிரபல ஆளுமைகள், அரசியல் தலைவர்களுடனான அவரது இனிய தொடர்புகளை இந்த நூல் பதிவு செய்துள்ளது.
பெரிய புராணம், சிலப்பதிகாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற தமிழின் உன்னதமான இலக்கியங்களில் ஆதீனகர்த்தரின் ஆழ்ந்த தேர்ச்சியை நூலில் காண முடிகிறது. பொம்மபுர
ஆதீனம் ஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகளின் ஆசியுரையும், சக்தி குழுமத் தலைவர் ம.மாணிக்கம் அளித்துள்ள அணிந்துரையும் நூலுக்கு சிறப்புச் சேர்க்கின்றன.
உண்மையும் வாய்மையும் ஒன்றா, அருணகிரிநாதரின் சிறப்பு, கல்வி நிலையங்களும் திருக்கோயில்களே ஆகிய படைப்புகளும், தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு ஆதீன வளாகத்தில் சிலை அமைத்தது தொடர்பான 'கெட்டதிலும் நல்லது' கட்டுரையும் முக்கியமானவை. தமிழகத்தின் தொன்மையான இசைக்கருவிகள் பற்றிய கட்டுரை கவனத்தை ஈர்க்கிறது.