நியாயங்கள் காயப்படுவதா?
நியாயங்கள் காயப்படுவதா? - வே.சுகுமாரன்; பக். 162; ரூ.180; ஆம்பல் பதிப்பகம், சென்னை-8; ✆ 78689 34995.
தினமணி உள்பட பல்வேறு பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டில் பார்வையற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பிரதான கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன.
கருத்துப் பகிர்வுக்கான களமாக மட்டுமே கட்டுரைகளை பயன்படுத்தாமல், ஒவ்வொரு தலைப்பின் கீழ் தனித்தனியே ஆய்வு மேற்கொண்டு நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். பண மதிப்பிழப்பில் தொடங்கி தீவிரவாதம், ஜாதிய பாகுபாடுகள், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி நூலகம், இந்திய விண்வெளி ஆய்வு வரை தனது விசாலமான பார்வையை வாசகர்களிடம் முன்வைக்கிறார் நூலாசிரியர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் ஏற்படும் நெருக்கடிகளும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் அகச்சிக்கல்களும் நூலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான திட்டங்களை முன்னெடுக்கும்போது அதன் பின்புலத்தில் எத்தனை அரசியல் ஒளிந்திருக்கிறது என்பதை சில கட்டுரைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது.
ஒவ்வொரு கட்டுரையிலும் பல்வேறு தரவுகள், மேற்கோள்கள், சம்பவங்கள், இலக்கிய உவமைகளை கையாண்டிருப்பது சிறப்பு. மாற்றுத்திறனாளிகளுக்கு, குறிப்பாக பார்வையற்றவர்களுக்கு நாம் அளிக்கும் சமூக அடையாளங்களை மீளாய்வு செய்யத் தூண்டும் நூல் இது.