ஈழம்
ஈழம் - வந்தவர்களும் வென்றவர்களும் - ஜோதி கணேசன்; பக். 360; ரூ. 400; சுவாசம் பதிப்பகம், சென்னை - 127; ✆ 8148066645.
இலங்கைத் தமிழர் போராட்டத் தொடக்கம் முதல் இறுதிக் கட்டப் போர் வரையிலான வரலாறு இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. நூல்களை வாசித்தும் வலைதளங்களைப் படித்தும் அங்குள்ள தமிழர்களிடம் பேசியும் எழுதப்பட்டது இந்த நூல். இலங்கையின் பூர்வகுடிகளில் தொடங்கி, மன்னர் காலம், மலையகத் தமிழர் குடியேற்றம் என்று வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன. சிங்களத் தலைவர்கள் மட்டுமின்றித் தமிழர் தலைவர்கள் உருவான விதம் பற்றியும் குறிப்பிடுவதுடன், அவர்கள் செய்த பிழைகளுடன் எத்தகைய சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தைத் தமிழர்கள் நம்பத் தொடங்கினார்கள் என்பதற்கான காரணிகளும் விவரிக்கப்படுகின்றன.
1983 ஜூலை கலவரம் தொட்டுப் பின்வந்த ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் வலுப்பெற்றதும் இந்தியா தலையிடத் தொடங்கியதும் ராஜீவ் - ஜெயவர்த்தன உடன்பாடு உருவாக்கப்பட்ட விதமும் அதனுடைய அமலாக்கத்தில் நேரிட்ட பிரச்னைகளுமாகப் பேசப்படுகின்றன.
ராஜீவ் படுகொலையுடன் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாரதூரமான விளைவுகளும் தரப்படுகின்றன. சிங்களத் தலைவர்கள், அவர்களின் குணாதிசயங்கள் பற்றியும் தனித்தனியே தரப்பட்டிருக்கிறது.
2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் தொடர்பாக நூலில் ஏராளமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பிரபாகரன் வீரச்சாவுற்றதாக புலிகள் இயக்கத்தைச் சார்ந்தோர் வெளியிட்ட அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வலைதளத்தில் தொடராக எழுதப்பட்ட காலத்திலேயே வரவேற்பும் எதிர்ப்பும் சமமாக இருந்ததாகக் குறிப்பிடும் ஆசிரியர், சில தகவல்களை கே.பி.யிடம் பேசி அவருடைய நண்பர் உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.