மானுடத்தின் மகரந்தங்கள்
மானுடத்தின் மகரந்தங்கள் - ராஜம் கிருஷ்ணன்; பக்.272; ரூ.300; ஹெர் ஸ்டோரீஸ், சென்னை-4; ✆ 75500 98666.
முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன் பதினைந்து வயதிலேயே திருமணமானவர். கணவர் பணிநிமித்தம் பல ஊர்களில் வசிக்க நேர்ந்தபோது, மனைவியை படிக்க வைத்தார். ஆங்கிலத்தில் சிறுகதை எழுதத் தொடங்கி, தமிழிலும் எழுதி குவித்தார். இவரது படைப்புகள் கள ஆய்வின் அடிப்படையாக அமைந்தவை.
பாரதியாரைப் பற்றிய நூல் எழுத குறிப்புகள் சேகரிக்கக் கிளம்பிய இவர், தேவதாசி பெண்ணைச் சந்தித்தார். அவருக்கு பாரதியார் புத்திமதி என்று குறிப்பிட்டது: 'உனக்கு விதிக்கப்பட்ட வாழ்வை விடுத்து மற்ற பெண்மணிகளைப் போன்று வாழ முயற்சி செய்' என்று. அதுவே இந்த நாவலின் விதை.
இந்தப் பெண் நாவலில் மதுராம்பாவாக வருகிறார். தேச விடுதலைக்காகப் போராடியவரை மணந்து, ஒரு மகன், ஒரு மகளுக்குத் தாயானார். எந்த வாழ்வை மறந்தாரோ அதையே புகுந்த வீட்டுப் பெண்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இருப்பினும், நல்வாழ்க்கையே இவரது ஆசை. இவரின் மூன்றாம் தலைமுறை பேத்தி நடனம் கற்க விரும்புகிறார். அப்போது, நேர்கிற சம்பவங்கள்- உரையாடல்கள் வெளிப்படையாகப் பேசப்படுகின்றன. மதுராம்பா தனது பேத்திக்கு அறிவுரையாக பெண்களின் பாதுகாப்பை அவர்களின் கௌரவம் குறித்தெல்லாம் விவாதிக்கிறார்.
புதுவாழ்வை மேற்கொண்டாலும் சமூகமும் - உறவுகளும் உரிய மரியாதையை வழங்காத போக்கு மாற வலியுறுத்தி, நாவலை முடித்துள்ளார் ஆசிரியர். பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.