க.நா.சு. இலக்கியத் தடம்
க.நா.சு. இலக்கியத் தடம் - தொகுப்பாசிரியர் ப.கிருஷ்ணசாமி; பக்.135; ரூ.150; காவ்யா, சென்னை-24; ✆ 044-2372 6882.
தமிழில் எழுதினால் அங்கீகாரம் கிடைக்கவில்லை என தில்லி கிளம்பினார் க.நா.சுப்ரமண்யம். ஆனால், 1985-இல் சென்னை திரும்பி, தமிழில் மீண்டும் எழுதினார் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பிராமணராக இருந்தாலும், பிராமண நெறிகளைக் கடைப்பிடிக்காத தாராளவாதக் கொள்கை கொண்டவர். சி.ஐ.ஏ. அவர் என்று விமர்சனம் உண்டு. ஆனால் குடியிருக்க சொந்த வீடு கூட இல்லாதவர். அவரது ஜீவனம் என்பது ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி கிடைத்த சன்மானம் மூலம்தான் என்கிறார் நூலாசிரியர். 15 ஆயிரம் ஆங்கிலக் கட்டுரைகளை எழுதியதாகவும் நூலில் குறிப்பு உள்ளது.
60ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வந்த பன்மொழி வித்தகர், நோபல் பரிசு பெற்ற பலமொழி நூல்களை மொழி பெயர்த்து தமிழர்களின் ரசனையை வளர்த்தவர் என்ற பெருமைக்குரிய க.நா.சு. வின் 'இலக்கியத் தடம்' என்ன என்ற கிருஷ்ணசாமியின் விருப்பத்தால் தொகுக்கப்பட்டு, 1991-இல் வெளிவந்த நூலின் மறுபதிப்புதான் இந்த நூல்.
'க.நா.சு. நூல்கள்' குறித்து கோவை ஞானியும், அவரது சிந்திக்கும் ரசனை குறித்து தமிழவனும், பொய்த்தேவு நாவல் குறித்து மேட்டுத் தெருவின் மீது ஒரு பிராமண பார்வை என்று ராஜாராமனும், பிரமிள், அசோகமித்ரன், அம்ஷன் குமார், பா.கிருஷ்ணசாமி எழுதிய கட்டுரை, தவிர அவர் கண்ட நீண்ட பேட்டி 134 பக்கம் கொண்டநூலில் 40 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது.
பேட்டியில் அவரது ரசனை, விமர்சனம், பார்வை, கம்யூனிச எதிர்ப்பு கருத்துகள், சொந்த வாழ்க்கை எல்லாமும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. க.நா.சு.வின் இலக்கிய பங்களிப்பை அறிய படிக்க வேண்டிய நூல்.