சைவம் வளர்த்த தமிழ்
சைவம் வளர்த்த தமிழ் - முனைவர் ப. பாலசுப்பிரமணியன்; பக். 176; ரூ. 185; சங்கர் பதிப்பகம், சென்னை -49; ✆ 044 - 2650 2086.
ஆங்கிலம் வணிக மொழி, லத்தீன் சட்ட மொழி, கிரேக்கம் இசை மொழி, தமிழோ பக்தி மொழி என்று கூறுவார்கள். அதிலும் சைவ சமயம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணி அளப்பரியது.
இந்நூலில் 'தமிழ் வளர்ச்சியில் சைவம்' என்ற கட்டுரையில் தொடங்கி, 'பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம்', 'சைவத் தமிழ் நூல்கள்', 'வான் கலந்த திருவாசகம்', 'வள்ளலார்', 'மறைமலை அடிகள்', 'திரு.வி.க'. 'மனோன்மணீயம் சுந்தரனார்', 'வ.உ.சி'., 'உ.வே.சா.' உள்ளிட்ட 23 தலைப்புகளில் சைவ சமயத்தால் தமிழ்மொழி வளர்ந்ததையும், தமிழ் மொழியால் சைவ சமயம் வளர்ந்ததையும் சிறப்பாக விவரித்துள்ளார் நூலாசிரியர்.
சிவனைப் போற்றுபவர் எவராயினும் அவர் கடவுளின் வடிவமாகவே கருதப்படுவார். ஞானசம்பந்தரோ பிறப்பால் அந்தணர், திருநாளைப்போவாரோ தாழ்த்தப்பட்டவர், சேரமான் பெருமான் அரசர், கண்ணப்பர் வேடர். ஆயினும் இவர்களிடையே எந்த வேறுபாட்டையும் சைவம் கற்பிக்கவில்லை என்கிற ஆசிரியர் கூற்று மிகவும் சரியானது.
மேலும், சைவ சமயம் பெண்களை மதித்துப் போற்றி வந்ததையும் ஆசிரியர் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். பரவையார், சங்கிலியார், இசைஞானியார், காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் சைவம் வளர்த்த பெண்மணிகளுள் முக்கியமானோர்.
சைவ சமயத்தின் தமிழ்ப் பணியை விரிவாக ஆய்வு செய்துள்ள ஆசிரியர், குறிஞ்சிக் கபிலர், பாம்பன் சுவாமிகள், ந. கதிரைவேற்பிள்ளை, ஆறுமுக நாவலர் போன்ற தமிழறிஞர்களின் சைவத்தொண்டையும் அறிமுகப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.