ஆன்மிக தரிசனம்
ஆன்மிக தரிசனம் - குடவாயில் பாலசுப்ரமணியன்; பக். 200; ரூ. 190; அன்னம், தஞ்சாவூர்- 613 007; ✆ 75983 06030.
கோயில் கட்டடக் கலை ஆராய்ச்சி வல்லுநரான நூலாசிரியர் சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், கல்வெட்டுக்கள், செப்பேடுகளின்அடிப்படையிலும், தமிழ் இலக்கிய ஆதாரங்களின் துணைகொண்டும் அரிய 30 கட்டுரைகளை, புகைப்படப்பதிவுகளுடன் எழுதி இருக்கிறார்.
'இறைத்தன்மையை உரைக்கும் காட்சிக்கு இனியவையே ஆன்மிக தரிசனம்'' என்ற நூலாசிரியரின் முன்னுரை விளக்கம், மிகப் பொருத்தமாகவே அமைந்துள்ளது.
பக்திப் பரவசமூட்டும் இனிய காட்சிகளின் தரிசனத்தைக் காண்கிறோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழ்நாடு ஆன்மிக பூமியாக இருந்ததற்கான சான்றாதாரங்கள் நூலில் உள்ளன.
வேள்விகள் நிகழ்ந்ததற்கான சான்றுகளை புறநானூறு முதற்கொண்டு தேவாரம் வரையிலான பாடல்களின் மீது இலக்கியரீதியாக நிறுவுவதில் ஆசிரியரின் தமிழ்ப் புலமை வெளிப்படுகிறது. 1,400 ஆண்டுகளுக்கு முன்னரே விநாயகர் வழிபாடு நிலவியதை 'பேழைப் பெருவயிறன் கணபதி' என்ற கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.
தில்லை ஆடல்வல்லான், தஞ்சை வாகீஸ்வரன், ஆரூர் வீதிவிடங்கப் பெருமான், தாராசுரம் ஆனை உரிச்ச தேவர், திருவாலங்காட்டுப் பேயார், கங்கை கொண்ட சோழபுரம் சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் குறித்த கட்டுரைகள் அரிய பதிவுகள்.
நெல்லையப்பர் கோயில் சிற்பக் கருவூலம், குடைவரைக் கோயில்களின் சிறப்புகள், திருவொற்றியூரிலுள்ள வரிபிளந்து எழுதிய கல்வெட்டின் மகிமை, சிவனுக்கு தீபாவளி அபிஷேகம் செய்ததற்கான சித்தாய்மூர் செப்பேடு ஆவணம், திருவாரூர் வாணவேடிக்கை சிற்பங்கள் என சரித்திர நுண்ணுணர்வுடன், தேடித் தேடி தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். தமிழ்ப் பண்பாட்டுப் பெருவெளியைத் தெளிவுபடுத்தும் அற்புதமான நூல் இது.