காந்தியடிகளும் சோஷலிசமும் - ம.பொ. சிவஞானம்; பக். 104; ரூ. 135; பாரதி இலக்கியப் பயிலகம் திருவையாறு - 613 204; ✆ 9944831275.
காங்கிரஸ்காரரும் விடுதலைப் போராட்ட வீரருமான ம.பொ.சி. பின்னாளில் தமிழரசு கழகம் கண்டு தம் வாழ்நாள் முழுவதும் தமிழர் நலனை முன்னிறுத்திச் செயல்பட்டவர்.
காந்தியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் எழுதிய பத்து நூல்களில் ஒன்று இது. அவருடைய 'செங்கோல்' வார இதழில் தொடர் கட்டுரைகளாக வந்தவை தொகுக்கப்பட்டுள்ளன.
'காந்தியடிகள் சோஷலிசத்தின் பகைவரா?' என்ற முதல் கட்டுரையில் காந்தியை சோஷலிசத்தின் எதிரியாக வர்ணிப்பது பாவம் என்று குறிப்பிடும் ம.பொ.சி., காங்கிரஸை கலைப்பதற்கான அவருடைய தீர்மான வரிகளையே ஆதரவாக மேற்கோள் காட்டுகிறார். 'காந்தியடிகளின் சோஷலிசத்தில் பற்று' பற்றி எழுதும்போது, 'சோஷலிஸ்டுகள் கெட்டவர்களாக இருக்கலாம். ஆனால், சோஷலிசம் கெட்டதாக இருக்க முடியாது' என்ற அவருடைய வரியைக் குறிப்பிடுகிறார்.
'கம்யூனிஸத்தைகூட கொள்கையளவில் காந்தியடிகள் எதிர்க்கவில்லை' என்று கூறும் மா.பொ.சி., அகிம்சைபூர்வமான கம்யூனிஸத்தையே நான் விரும்புகிறேன். எந்தவித பலாத்காரமும் இல்லாமல் கம்யூனிஸம் வந்தால் அது வரவேற்கத்தக்கதே என்ற காந்தியின் வரியை நினைவுகூர்கிறார்.
நூலின் மிகச் சிறந்த கட்டுரை 'காந்திஸமும் மார்க்ஸிஸமும்'. மார்க்ûஸ குறை கூறலாம். ஆனால், அவர் மிகப் பெரியவர் என்பதை யார் மறுக்க முடியும்? என்ற காந்தியின் வரிகளுடன், தமிழ்நாட்டில் காந்தியத்துடன் மார்க்சியத்தைப் பிணைத்துப் பிரசாரம் செய்தவர்களென ராஜாஜியையும் திரு.வி.க.வையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
தீர்க்கதரிசனம், தருமகர்த்தா பொதுவுடைமை, சுயாட்சியும் சோஷலிசமும், மதமும் சோஷலிசமும், கல்வியும் சோஷலிசமும், அகிம்சை வழியில் சோஷலிசம் என்ற தலைப்புகளில் ஆய்வுரைகள் இடம் பெற்றுள்ளன. விஞ்ஞான சோஷலிசத்தை எதிர்ப்போர் காந்தியவாதிகளாக மாட்டார்கள் என ரத்தினச் சுருக்கமாக முடிவுரையில் குறிப்பிட்டு முடிக்கிறார் ம.பொ.சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.