இந்துக்களின் எழுச்சி நாயகன்
இந்துக்களின் எழுச்சி நாயகன் - (தொகுப்பு - பசுத்தாய் கணேசன்); பக். 432; ரூ.400; பசுத்தாய் பதிப்பகம், சென்னை - 2 ; ✆ 9840747694.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மெல்ல வீழ்ச்சி அடைந்த இறைநம்பிக்கை, சிந்தனைகளில் இருந்து ஹிந்துக்களைக் காப்பாற்றும் போராட்டத்தில் பலர் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுள் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான 'இந்து முன்னணி' நிறுவனர் 'வீரத்துறவி' இராம. கோபாலன்.
தேசத்தையே தெய்வமாக நினைத்து தமிழகம் முழுவதும் பலமுறை வலம் வந்தவர்களில் முதன்மையானவர் இவர். ஹிந்துக்களுக்காக வாதாடி, போராடி, பரிந்து பேச எண்ணற்றவர்களை இணைய வைத்த பெருமை இவரையே சாரும். ஒன்றிணைவதால் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்துவிட முடியும் என்றும், கலியுகத்தில் ஒன்றிணைவதுதான் (சங்கம்) சக்தி என்பதை பலருடைய மனங்களில் ஆழப்பதிய வைத்தவர்.
இவர் 50 நூல்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். தன்னைப்போல போராட பலரை உருவாக்கியவர்; வீட்டுக்குள்ளே இருந்த விநாயகரை வீதியில் கொண்டுவந்து கொண்டாட வைத்தவர்; நாத்திக சிந்தனையை வீழ்த்தி தமிழகத்தில் ஆன்மிகச் சிந்தனைக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டவர்; மதுரை ரயில் நிலையத்தில் சில தேச விரோதிகளால் தலையில் பலமாக தாக்கப்பட்டும் வாழ்நாளில் தர்மத்தைக் கைவிடாத தகைமையாளர் இவர் என்று இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
சத்ரபதி சிவாஜி, சுவாமி விவேகானந்தர், பாலகங்காதர திலகர் வரிசையில், தன் வாழ்வையே அர்ப்பணித்து, மற்றவர்களையும் இதில் இணைய வைத்த இராம. கோபாலனின் இந்த வாழ்க்கைச் சரித நூல், ஹிந்து மறுமலர்ச்சிப் பணியில் இணைத்துக் கொண்டிருப்போருக்கு, இணைய இருப்போருக்கு வழிகாட்டி.