முகப்பு
வணிகம்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

Updated On : 25 ஏப்ரல், 2026 at 7:00 AM
பகிர்:

நாட்டின் முன்னணி கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனமான எல்&டி, தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கியுள்ளது.

‘எல்&டி எலக்ட்ரானிக் புராடக்ட்ஸ் & சிஸ்டம்ஸ் (எல்டிஇபிஎஸ்)’ எனும் பெயரில் உருவெடுத்துள்ள இப்புதிய வா்த்தகப் பிரிவின் தலைமையகம் பெங்களூருவில் அமையவுள்ளது. உற்பத்திப் பணிகள் கோவையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள எல்&டி வளாகத்தில் புதிய உற்பத்திப் பிரிவின் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை முறைப்படி தொடங்கப்பட்டன. தற்போது கோவையில் 2 அதிநவீன உற்பத்தித் தளங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளா்களுக்கு மின்னணு உற்பத்திச் சேவைகள் வழங்கப்படவுள்ளன.

Advertisement

40 ஏக்கா் பரப்பளவிலான இந்தக் கோவை வளாகத்தை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆா்&டி), வடிவமைப்பு மற்றும் சோதனை வசதிகள் என மின்னணு உற்பத்தியின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய மாபெரும் மையமாக விரிவுபடுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருங்காலத்தில் பவா் எலக்ட்ரானிக்ஸ், மொபிலிட்டி, ரோபாட்டிக்ஸ் மற்றும் தகவல்தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மின்னணு சாதனங்களை வடிவமைத்து உருவாக்கவும் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

‘இப்புதிய முன்னெடுப்பின் மூலம் நாட்டின் மின்னணு உற்பத்திச் சூழலை வலுப்படுத்துவதுடன், அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் எங்களின் இருப்பை விரிவுபடுத்துகிறோம்’ என்று எல்&டி நிறுவனத் தலைவா் எஸ்.என்.சுப்ரமணியன் தெரிவித்தாா்.