மூட்டம் (சிறுகதைகள்)- தொகுப்பாசிரியர் வ.நவநீதகிருஷ்ணன்; பக்.166; ரூ.190; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட்., பெங்களூரு- 560 076; ✆ 74185 55884.
வறண்ட கரிசல் மண்ணின் அவலங்களை தனது எழுத்தில் படைத்தவர் தனுஷ்கோடி ராமசாமி. இவரது நினைவாக நடைபெற்ற மூன்றாவது சிறுகதைப் போட்டியில், 250 சிறுகதைகள் வரப்பெற்றதில், 15 கதைகளை மட்டும் தேர்வு செய்து நூலாக்கியுள்ளனர்.
மூட நம்பிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் வகையில் கூத்து - நாடகம் வாயிலாக 'மன்மதன் கூத்து', அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளிடையே இணக்கத்தை பறவை மூலம் விளக்கும் 'பறவை மொழி', துப்புரவுப் பணி செய்யும் குடும்பத்தினரின் விலங்குகள் பாசத்தைக் கூறும் 'வதை', இளநீர் விற்கும் கடையின் சிறப்புகளை 'வாழ நினைத்தால்' எனும் சிறுகதைகள் விளக்குகின்றன.
இஸ்லாமிய பெண்ணின் குரலை 'தலாக்', குடும்ப வழக்குகளில் பெண் தரப்புக்கு ஏற்படும் இழப்பு குறித்து நீதிபதியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் 'வாய்தா', ஆணின் மதுப் பழக்கத்தால் குடும்பத்தில் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை விளக்கும் 'சுட்ட வடு', உதவி செய்யாத மகன் மீது அலுவலகத்தில் புகார் செய்யும் தாயின் மனவேதனையைச் சுட்டிக் காட்டும் 'பலமும் பலவீனமும்' ஆகிய சிறுகதைகள் பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
கரிமூட்டம் போட்டு வாழும் மக்களின் வாழ்க்கை, பண்பாட்டை விளக்கும் 'மூட்டம்', விவசாயத் தொழிலாளிக்கு விபத்தால் ஏற்படும் சிரமங்களை 'வண்டித்தடம்', வனத் துறையையும் யானைகள் குறித்தும் விளக்கும் 'செம்புலம்', பொய் வழக்கால் காவல் நிலையம் சென்று உடல்நலப் பாதிப்புடன் திரும்பும் நபரால் குலையும் குடும்ப அமைதியைப் படம் பிடிக்கும் 'முதல் பிணம்', சுற்றுச்சூழல் பாதிப்பை விளக்கும் 'குளம்', வழிபாட்டுத் தலத்தில் உள்ள சிக்கல்களை 'காசும் பேசும்' ஆகிய சிறுகதைகள் விளக்குகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.