தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா.சண்முகம் (கோலாலம்பூர்)-முனைவர் மு.இளங்கோவன்; பக்.144; ரூ.200; வயல்வெளிப் பதிப்பகம், புதுச்சேரி - 605 003. ✆ 94420 29053.
தமிழ் மொழியின் செழுமையையும் மக்களின் அறிவு மேம்பாட்டையும் பறைசாற்றும் ஒப்பற்ற நூல் தொல்காப்பியம். பிற்கால இலக்கண மற்றும் இலக்கிய நூல்களுக்கு முதல் நூலாகவும், அடிப்படையாகவும் திகழ்கிற தொல்காப்பியத்தை ஆராய்ந்தவர்கள் ஏராளம். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் நெல்லை இரா. சண்முகம்.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், குரும்பூரை அடுத்துள்ள அங்கமங்கலத்தில் பிறந்து, மலேசியாவில் கோலாலம்பூரில் வாழ்ந்தவர். தீவிர தமிழ்ப் பற்றாளர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் நூல்களைப் படித்துத் தமிழார்வம் வரப்பெற்றவர். தொல்காப்பியத்தை ஆழ்ந்து கற்ற பெருமகனாரான இரா.சண்முகம் குறித்து கிடைத்த செய்திகளின் அடிப்படையில் அவரது வரலாற்றை சிறப்பாகத் தொகுத்துள்ளார் இந்நூல் ஆசிரியர்.
அதற்காக அவரது நூல்களை பல்வேறு நூலகங்களில் இருந்து திரட்டியும், அவரது குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்களை நேரில் சந்தித்தும், கைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டும் பல செய்திகளை ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ளார். அதன் மூலம் அன்னார் குறித்து பல விவரங்கள் தெரிய வருகிறது.
சிங்கப்பூர் 'தமிழ் முரசு' இதழில் 1951 - 1952-ஆம் ஆண்டுகளில் பல கட்டுரைகளை எழுதியவர், தொல்காப்பியம் குறித்து மூன்று நூல்களையும், பிறவகையில் நான்கு நூல்களையும் வெளியிட்டுள்ளார். 'தேனீ' என்ற இலக்கிய இதழை மலேசியாவில் நடத்தி, இதழ் ஆசிரியராகவும் விளங்கியுள்ளார்.
நூலின் இறுதியில் இரா.சண்முகத்தின் ஒளிப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருப்பது இந் நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.