சிலப்பதிகாரத்தில் சனாதனம்
இந்தியா முழுவதும், சிறு வேறுபாடுகளுடன் ஒரே பண்பாடுதான் இருந்தது என்பதை காலக் கண்ணாடியாக சிலப்பதிகாரம் காட்டுகிறது என்று ஐயமின்றி உறுதியாக இந்நூல் நிறுவுகிறது.
சிலப்பதிகாரத்தில் சனாதனம்-பத்மன்; பக். 320; ரூ. 300; விஜயபாரதம் பிரசுரம், சென்னை- 600 031, ✆ 89391 49466.
வரலாற்று நூல்கள் இல்லாத இடத்தில் இலக்கியச் சான்றுகள், கட்டளை கல்வெட்டுகள் முதலியவற்றைக் கொண்டு பழங்கால வரலாற்றை அறிந்து கொள்கிறோம்.
அவ்வகையில், பண்டைக்காலம் முதலே வைதிக, சநாதன தர்மத்தை தமிழ்ச் சமூகம் ஏற்று வந்துள்ளதன் ஆவணமாக உள்ளது சிலப்பதிகாரம். பாரதம் தழுவிய சநாதனப் பண்பாடே பழந்தமிழர் பண்பாடு என்பதற்குப் பல்வேறு ஆதாரங்களை சிலப்பதிகாரம் தருகிறது என்று நூலாசிரியர் எடுத்துக்கூறுகிறார்.
Advertisement
வைதிகப் பண்பாடு எவ்வாறு அன்றைய தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றி இருந்தது என்பதற்கான ஏராளமான சான்றுகள் சிலம்புக் காப்பியம் முழுவதும் உள்ளதை அறிய முடிகிறது.
ஆரிய-திராவிட இனவாதத்துக்கான ஆதாரங்களோ, சமூகப் பாகுபாடு தீமைகளுக்கு ஆரியர் திணிப்பே காரணம் என்பதற்கான ஆதாரங்களோ சிலப்பதிகாரத்தில் இல்லை. அதேவேளையில், அக்னியை வலம் வந்து நிகழ்த்தும் திருமணச் சடங்கு, சகுனங்கள், முகூர்த்தம், உருவ வழிபாடு, ஊழ்வினையில் நம்பிக்கை நிறைந்திருந்த அன்றைய தமிழகத்தைச் சிலம்பு காண்பிக்கிறது.
இந்தியா முழுவதும், சிறு வேறுபாடுகளுடன் ஒரே பண்பாடுதான் இருந்தது என்பதை காலக் கண்ணாடியாக சிலப்பதிகாரம் காட்டுகிறது என்று ஐயமின்றி உறுதியாக இந்நூல் நிறுவுகிறது.
இளங்கோவடிகள் வேதம் சாராத சமண மதத்தினராக இருந்தும், அக்காலத்திய சமூகத்தை, மக்களின் நம்பிக்கைகளை, அன்றாடம் கடைப்பிடித்த வழக்கங்களைத் தமது காப்பியத்தில் சம நோக்குடன் விவரித்திருக்கிறார்.
பண்டைய தமிழ்ச் சமூகம் எப்பிரிவினரிடையேயும் வேறுபாடு காட்டாமல், வேதம் சார்ந்தே இருந்தது என்பதை சிலப்பதிகாரத்தின் வாயிலாக உறுதிபட நிறுவியுள்ளார் நூலாசிரியர்.