தமிழ்ப் பெருவெளியில் இசுலாமியப் பேரொளி
தமிழ் இலக்கியத் தடத்தில் இஸ்லாமியர்கள் விட்டுச்சென்ற சுவடுகளை அறிய விரும்புவோர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஓர் அடிப்படை தரவு நூலாகும்.
தமிழ்ப் பெருவெளியில் இசுலாமியப் பேரொளி-முனைவர் அ. நசீமா, கவிஞர் து. ஸ்ரீதேவி; பக். 152; ரூ. 200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 021, ✆ 93805 30884.
தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியர்கள் ஆற்றிய தனித்துவமான பங்களிப்பை 12 அத்தியாயங்களில் சுருக்கமாக ஆவணப்படுத்தும் நூல் இது. இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் ஆதி வேர் முதல் சமகாலப் போக்குகள் வரை ஒரு முழுமையான சித்திரத்தை வழங்க முயல்கிறது.
குறிப்பாக, முஸ்லிம்கள் பயன்படுத்திய அரபு - தமிழ் எனும் தனித்துவமான மொழி மரபு மற்றும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் பல்சந்தமாலை தொடங்கி சீறாப்புராணம், சிற்றிலக்கிய வகைமைகளான கிஸ்ஸா, படைப்போர், நூறுநாமா எனப் பல்வேறு தளங்களில் இஸ்லாமிய இலக்கியங்களின் வரலாறுகள், இஸ்லாமிய வாழ்வியல், சூபிகள் தத்துவங்கள் என பல்வேறு கருத்துகள் தமிழ் நிலத்தின் இயங்கியலோடு எவ்வாறு ஒன்றிணைந்தன என்பதை நூல் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது.
Advertisement
பேராசிரியர் எம்.எம். உவைஸின் ஆய்வுப் போக்கின் தாக்கத்தில் உருவாகியிருக்கும் இந்நூல், தமிழிசை மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களில் முஸ்லிம்களின் பங்கையும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்ககால பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பையும் பதிவு செய்துள்ளது.
நவீன கால ஆண்-பெண் இஸ்லாமிய எழுத்தாளர்களின் படைப்புகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் முழுமையாக உள்வாங்கத் தவறியிருந்தாலும், தமிழ் இலக்கியப் பரப்பில் இஸ்லாமியர்களின் இலக்கியப் பங்களிப்பை அறிந்துகொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டி நூல்.
தமிழ் இலக்கியத் தடத்தில் இஸ்லாமியர்கள் விட்டுச்சென்ற சுவடுகளை அறிய விரும்புவோர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஓர் அடிப்படை தரவு நூலாகும்.