என் சுயசரிதை
எளிய உரையுடன் கூடிய பகவத் கீதை மொழிபெயர்ப்பு இவரது சிறந்த நூலாகும்.
என் சுயசரிதை - சகோதரி ஆர்.எஸ். சுபலக்ஷ்மி அம்மாள்; பக்.400; ரூ.400; ஸ்பாரோ சார்பாக சி.எஸ்.லக்ஷ்மி (ம) சுவாசம் பதிப்பகம், சென்னை- 600 127, ✆ 81480 66645.
சகோதரி ஆர்.எஸ். சுபலக்ஷ்மி அம்மாள் பூர்வீகம் தஞ்சை மாவட்டம் ரிஷியூர். ஆனால், இவர் பிறந்தது சென்னை மயிலாப்பூரில். பால்ய விவாகம்; கணவர் இறந்ததுகூட தெரியாமலேயே வளர்ந்தார். பெற்றோர் கல்வி கற்க ஏற்பாடு செய்தனர். 1911-இல் மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற முதல் பிராமணப் பெண்மணி ஆனார். 1912-இல் ஆசிரியர் பயிற்சி (எல்.டி. பட்டம்) பெற்றார். பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
கல்வி ஆய்வாளர் கிரிஸ்டினா லிஞ்ச் ஆதரவுடன் 1912-ஆம் ஆண்டில் சாரதா ஐக்கிய சங்கம் அளித்த ரூ. 2000-ஐ வைத்து விதவைகள் இல்லம் தொடங்கினார். இது சாரதா ஆச்ரமம் - சாரதா இல்லம் என்று அழைக்கப்படலாயிற்று. கைம்பெண்கள் கல்வி கற்று, அவர்கள் ஆசிரியராகவும் வந்தால், பல பெண்கள் கல்வி கற்க முன்வருவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த இல்லம் பல இடங்களுக்கு மாறி, ஐஸ் ஹவுஸ் இல்லம் அருகே சென்றது.
Advertisement
தியாகராய நகர் "சாரதா வித்யாலயம்', "வித்யா மந்திர்' போன்ற கல்வி நிலையங்களை உருவாக்கினார். சாரதா வித்யாலயம் பொறுப்பை பின்னர் ராமகிருஷ்ண மடம் ஏற்றது.
1952-56 காலகட்டத்தில் சென்னை மாகாண மேலவை உறுப்பினராகவும் செயல்பட்டார்.
பத்மஸ்ரீ விருதும் இவரைத் தேடி வந்தது. தனது சுய சரிதையாக மட்டுமல்லாமல், 19-ஆம் நூற்றாண்டின் இறுதி 20-ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தின் பெண்களின் நிலை குறித்து எழுதியுள்ளார். எளிய உரையுடன் கூடிய பகவத் கீதை மொழிபெயர்ப்பு இவரது சிறந்த நூலாகும்.
இவரின் சுயசரிதை வை.மு. கோதைநாயகி ஆசிரியராக இருந்து நடத்திய "ஜகன்மோகினி'யில் தொடராக வந்தது. பல இதழ்கள் கிடைக்கப்பெறாத நிலையிலும் பெரு முயற்சி செய்து, எழுத்தாளர் சி.எஸ். லக்ஷ்மி இந்நூலை தொகுத்துள்ளார்.