மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
ராகுல் காந்தி வருகை பற்றி திமுகவின் ஆர்.எஸ். பாரதி பேட்டி..
முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவரும் ஒன்றாக பிரசாரம் செய்ய நேரமில்லை என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை(ஏப். 18) தமிழகம் வரவிருக்கிறார். பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தமிழகம் வரவில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் ராகுல் காந்தி நாளை தமிழகம் வரவுள்ளார்.
Advertisement
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ராகுல் காந்தியும் ஒன்றாக பிரசாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அதுபற்றி பதிலளித்த திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி,
"ஏற்கனவே முதல்வரின் பிரசார பயணத் திட்டம் போடப்பட்டுவிட்டது. அதனால் அதனை மாற்ற முடியாது. அதனால் ராகுல் ஒருபக்கம் பிரசாரம் செய்வார், முதல்வர் அவர் திட்டமிட்டபடி பிரசாரம் செய்வார். ராகுல் பிரசாரத்தில் திமுக சார்பில் காலந்துகொள்வோம்.
ராகுல் ஒருநாள்தான் இங்கு வருகிறார். முதல்வரின் பிரசாரத்தில் மாற்றம் செய்தால் 30 -40 தொகுதிகள் பிரசாரம் பாதிக்கும். முதல்வர் ஏப். 20 ஆம் தேதி முதல் தனது தொகுதியில் பிரசாரத்திற்குச் செல்ல வேண்டும். அதனால் ஸ்டாலின், ராகுல் இருவரும் ஒன்றாக பிரசாரம் செய்ய நேரமில்லை" என்று கூறினார்.