செவ்வியலும் நாட்டுப்புறவியலும்
ஆயிரம் ஆண்டு கால நீட்சி உடைய செவ்வியல் காலத்துக்கு முன்னரே வழக்கத்தில் இருந்த நாட்டுப்புற வழக்காறுகள், தொல்காப்பியரின் கருப்பொருள் விளக்கத்திலும் இடம்பெற்றுள்ளன.
செவ்வியலும் நாட்டுப்புறவியலும்- பேரா. முனைவர் சு.சண்முகசுந்தரம்; பக்.190; ரூ.200; காவ்யா, சென்னை-600 024, ✆ 98404 80232.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையும் தொடர்ச்சியும் உடைய தமிழர் வாழ்வியல் வரலாற்றை எண்ணற்ற நூல்களில் அறியலாம். அதிலும், செவ்வியல் படைப்புகளில் முதன்மை நூலான தொல்காப்பியத்தில் சங்க காலம், காப்பிய காலம் என்று விரித்து காணலாம். ஆயிரம் ஆண்டு கால நீட்சி உடைய செவ்வியல் காலத்துக்கு முன்னரே வழக்கத்தில் இருந்த நாட்டுப்புற வழக்காறுகள், தொல்காப்பியரின் கருப்பொருள் விளக்கத்திலும் இடம்பெற்றுள்ளன.
'பச்சையானது வெந்ததாகிறது. வனம் பூவனமாகிறது. காட்டாறு கட்டப்பட்ட அணையாகிறது. முரடு முருகாகிறது. நாட்டுப்புறவியல் செவ்வியலாகிறது' என்று கூறும் நூலாசிரியர் அவை இரண்டுக்கும் கொண்டான் கொடுத்தான் உறவை அழகுற எடுத்துரைக்கிறார்.
தொல்காப்பியத்தில் திணைக் கோட்பாடு, சிறுபாணாற்றுப் படையில் நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறக் கலைகளுடன் இன்றைய கலைகள் ஒப்பாய்வு, சங்க இலக்கியத்தில் நாட்டுப்புற அழகியல், சிலப்பதிகாரம், செவிவழிக் கதைகள், கண்ணகி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழின் பெருமைகளைக்கூறும் நூலாசிரியர் இவை பெரும்பாலும் நாட்டுப்புறவியல் சார்ந்ததே என ஆய்வு நோக்கில் விளக்கியுள்ளார்.
கூத்துக் கலைகளின் வகைகள், ஒயிலாட்டம், உடுக்கடி, பாணர்களின் இசைப்பாடல்கள் உள்ளிட்டவை குறித்த விளக்கங்கள் தமிழர்களின் சிறப்புகளை உலகுக்கு எடுத்துரைக்கும்.
தெய்வ வழிபாட்டுக்கான கரகம் ஆடுவதை ஆயுதப் படைக் காவலர்களும், ஆய்வாளர்களும் கற்று ஆடுவது அந்தக் கலைக்குச் சிறப்பை உண்டாக்குகிறது என்கிறார் நூலாசிரியர்.
நாட்டுப்புறப் பாடல்கள் பலவற்றையும் எடுத்துச் சொல்லியிருப்பது இன்றைய தலைமுறையினருக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு கட்டுரையிலும் பயன்பட்ட நூல்கள் குறித்த விவரங்களை இணைத்திருப்பது மேலதிக விவரங்கள் வேண்டுவோருக்கு வழிகாட்டுதல்களை அளிக்கும்.