வெந்து தணிந்தது வீடு
கதை நடக்கும் இடம் மட்டுமல்ல சம்பவங்கள், வசனங்கள் மூலம் கதை நடக்கும் காலமும் சில கதைகளில் உணரப்படுவது சிறப்பு.
வெந்து தணிந்தது வீடு - சித்ரூபன்; பக். 192, ரூ. 250, சுவாசம் பதிப்பகம், சென்னை -600 127, ✆ 81480 66645.
கதை சொல்வது மரபு ரீதியான ஒன்று. மனிதன் தன் அனுபவங்களை அடுத்தவர்க்கும், அடுத்த தலைமுறையினர்க்கும் சொல்வதையே கதை என்கிறோம்.
சித்ரூபனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்நூலில் பல்வேறு வார, மாத இதழ்களில் பிரசுரமான அவரது 16 கதைகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு கதையின் தலைப்பே தொகுப்புக்கும் வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
'தோழரின் தோழி' என்ற சிறுகதையில் பரசுராமர் என்பவரின் தொழிற்சங்க ஈடுபாடும், மனிதாபிமானமும், அவரது காதலும் நல்ல முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
'காசி யாத்திரை' சிறுகதை, சுமங்கலி என்ற பெண்மணி குறித்து, உணர்வுபூர்வமாக காசியின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் மகுடமாகத் திகழ்கிறது, 'இலக்கிய விபத்து' என்ற சிறுகதை. அது ஃபேஸ்புக்கிலும், குழுக்களிலும் சிறுகதைகளை எழுதிவரும் சித்குப்தன் என்ற எழுத்தாளர் குறித்த கதை. இன்றைய ஃபேஸ்புக் எழுத்தாளர்களின் மன ஓட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுவது போல் கதையின் ஆரம்பமும் முடிவும் எழுதி இருக்கும் விதமும் மிகவும் ரசிக்க வைக்கிறது.
இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலங்களில் நடப்பதாக உள்ளது. சில கதைகள் சிறுகதை இலக்கணத்தில் அடங்காமல் இருந்தாலும் நல்ல கதைகளே. கதை நடக்கும் இடம் மட்டுமல்ல சம்பவங்கள், வசனங்கள் மூலம் கதை நடக்கும் காலமும் சில கதைகளில் உணரப்படுவது சிறப்பு.